நடிகர் தனுஷ் அடுத்தடுத்த லைன் அப்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். நடிகர் பாடகர் இயக்குனர் தயாரிப்பாளர் கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட தனுஷ் தமிழில் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தேரே இஸ்க் மெய்ன் இந்தி படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
தமிழில் இட்லி கடை படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர. இந்த படத்தை போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்ட் செய்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
அடுத்து லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை கதைக்களத்தில் உருவாக உள்ளது. அதன்பிறகு இயக்குனர் எச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். அது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஷூட்டிங் துவங்க உள்ளது.
இப்போது தமிழரசன் பச்சமுத்து படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருது விழாவில் நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது மாரி செல்வராஜிடம், கதையின் ஸ்கிரிப்ட் தருமாறு தனுஷ் கேட்டிருக்கிறார்.
இப்போதுதான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் 2 வாரங்களில் ரெடியானதும் உங்களுக்கு தந்து விடுகிறேன் என்று மாரி செல்வராஜூம் தனுஷிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷ் கெட்டப் சேஞ்ச் செய்து நடிக்க இருக்கிறார். மேலும் வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 2 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் ஒதுக்கும் நடிகர் தனுஷ் இந்த படத்துக்கு 6 மாதங்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். நீங்கள் விரும்புகிற படி படம் வரவேண்டும் என்றும் இயக்குனரிடம் கூறியிருக்கிறார். இதற்கு காரணம் இது ஒரு வரலாற்று பின்னணி படம் என்பதாகும். மேலும் ஏற்கனவே கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





