இயக்குனர் இமயம் பாரதிராஜா 84 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். தமிழக முதல்வர் விஜய் திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர்கள் சிவக்குமார் சூர்யா ராதிகா சரத்குமார் நிரோஷா பார்த்திபன் கவிஞர் வைரமுத்து சீமான் உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜா மறைவு குறித்து நடிகை ரேகா கூறுகையில், நான் இன்று நடிகை என்ற அடையாளத்துடன் வாழ்வதற்கு காரணமே பாரதிராஜா தான். அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் கவுண்டமணி கூறுகையில், எனக்கு 16 வயதினிலே படத்தில் நடிக்க வாய்ப்பளித்து முகவரி தந்தவர் பாரதிராஜா என்றும் கூறியிருக்கிறார்.
நடிகை குஷ்பு தனது பதிவில், பாரதிராஜா இன்று நம்முடன் இல்லை என்பதை அறிந்து நெஞ்சம் கலங்கி நிற்கிறேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும். ஒரு கருமேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமாவின் மைல்கற்கள். ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றார் என்று குஷ்பு கூறியிருக்கிறார்.
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த கிழக்கே போகும் ரயில் என்ற பெயரில் தன் 2வது படத்தை உருவாக்கினார். ஹரிதாஸ் படத்துக்கு பிறகு மிக அதிக நாட்கள் ஓடிய பெருமையை அந்த படம் பெற்றது.
பாரதிராஜா இயக்கிய ஒவ்வொரு படமும் தனி ரகம். நிறைய நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவர். பல தொழில் நுணுக்க கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை கொண்டவர். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இயக்குனர். இன்று அவர் நம்மிடையே இல்லை.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நினைவை போற்றுகிற வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக்கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருது தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று அந்த பதிவில் நடிகர் சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.





