தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகன். 2வது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் முத்துக்கண்ணுவுக்கும் 2 மகள்கள் உள்ளனர்.
அருண் விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வாய் பேசாத ஒரு கேரக்டரில் அவரது நடிப்பு நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று தனது 47வது பிறந்த நாளை நடிகர் அருண் விஜய் கொண்டாடி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது பிறந்த நாளான இன்று நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்தார். அப்போது செய்தியாளர்களை அருண் விஜய் சந்தித்தார்.
அப்போது அருண் விஜய் கூறியதாவது, வணங்கான் படம் என்னுடைய சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு நடிகராக என்னை வேறு ஒரு பரிமாணத்தில் இந்த படம் காட்டும். பாலா படம் என்றாலே கஷ்டமாக தான் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் நான் இந்த படத்தில் கஷ்டப்படவில்லை. இஷ்டப்பட்டு தான் எல்லா விஷயங்களையும் செய்தேன்.
இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. குட்பேட் அக்லி படமும் வணங்கான் படமும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது. அதனால் அஜித் குமாருக்கும் எனக்கும் போட்டியா என்று கேட்டால், அஜீத்குமார் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கு யாரும் போட்டி கிடையாது.
அவருடைய ரசிகர்கள் என்னையும் நேசிக்கிறார்கள். நிச்சயமாக போட்டி எதுவும் கிடையாது. நடிகர் விஜய் அரசியல் பயணம் வெற்றி பயணமாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று அருண் விஜய் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் அஜீத்குமாருடன், நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.





