தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைப் படம் அடுத்த ஆண்டில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். இப்போது கமல் அமெரிக்காவில் உள்ளார்.
அமெரிக்காவில் 45 நாட்கள் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்று வரும் கமல், வரும் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அன்பறிவ் மாஸ்டர்களை அமெரிக்காவுக்கே வரவழைத்து அவர்களுடன் தனது 237வது படம் குறித்து ஆலோசித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் பிரமாண குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு கடவுள் மறுப்பு கொள்கைகளை பின்பற்றினார். பெரியார் வழியை தேர்வு செய்தார். தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் கடவுள் மறுப்பாளராக தன்னை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
தசாவதாரம் படத்தில் கூட கிளைமாக்ஸ் காட்சியில், நான் கடவுள் இல்லை என்று எப்போது சொன்னேன், இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதானே சொன்னேன் என்று நடிகை அசினிடம் பேசுவது போல் டயலாக் அமைத்திருப்பார். ஆனால் அவர் குடும்பம் சார்ந்த மற்றவர்கள் நாத்திகம் சாராதவர்களாகவும் இருக்கின்றனர்.
இதுகுறித்து கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் கடவுள் சக்தியை நம்புகிறேன். கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் வாழ்க்கையில் என்னை வலிமையாக்கியது. எனது வீடு ஒரு நாத்திக இல்லமாக இருந்தது. எனக்கு தந்தை ( கமல்ஹாசன்) நாத்திகவாதி.
இதனால் வளரும் போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன். நான் முதலில் கோவிலுக்கு சென்றது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை இன்று வரை விரும்புகிறேன் என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். இது இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.





