நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 14ம் தேதி கூலி படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது மலையாள நடிகர் சௌபின் சாஹிர் தான். நடிகர் நாகார்ஜூனா மெயின் வில்லனாக இருந்தும் ஜூனியர் வில்லனாக நடிகர் சௌபின் சாஹிர் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் ரசிகர்களை மிரட்டி இருந்தார்.
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழகம் மற்றும் கேரளாவில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் பல கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், அந்த படத்தில் நடித்திருந்த சௌபின் சாஹிர் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சும்மெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டது.
அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர் இந்த படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இந்த படத்தில் 7 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகும் கூறியபடி 40 சதவீதம் லாபத்தை பங்கு தரவில்லை என்றும் அவர் எர்ணாகுளம் சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்ற மஞ்சும்மெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். சினிமாத் துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக இருந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. படத்தின் புகார் குறித்தும் படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கருப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது.
மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகரும் தயாரிப்பாளருமான சௌபின் சாஹிரிடமும் விசாரணை நடத்தப்பட்டது அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, வரவு செலவு போன்றவை குறித்தும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர். நிதி மோசடி வழக்கில் கேரளா ஐ கோர்ட் ஏற்கனவே அவருக்கு முன் ஜாமின் வழங்கி இருந்ததால் போலீசார் அவரை விடுவித்தனர்.
மேலும் அந்த வழக்கில் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளும் கோர்ட் விதித்துள்ளது. இந்நிலையில் துபாயில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள துபாய் செல்ல அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால் அவரை சந்தித்தால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அரசு தரப்பு வாதிட்டது. அதனால் அவர் துபாய் செல்ல கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.





