தமிழ் சினிமாவில் ஒரு இசை சகாப்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. கடந்த 50 ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையும் பல ஆயிரக்கணக்கான பாடல்களையும் உருவாக்கி ரசிகர்களுக்கு தந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிறமொழி படங்களிலும் தனது இசை வல்லமையை நிரூபித்தவர்.
மேலும் வேலியண்ட் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்து சாதனை படைத்தவர். இப்போது 2வத முறையாக சிம்பொனி அமைக்க அதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். இசைத்துறையில் ஒரு சக்ரவர்த்தியாக திகழும் இளையராஜாவின் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் சர்ச்சைகள் இருந்தாலும் இசையை பொருத்த வரை அவர் ராஜா ராஜாதான் என்பது மாற்றுக் கருத்து இல்லை.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்க திட்டமிடப்பட்டு அதற்கான துவக்க விழா பூஜையும் நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் இளையராஜா தனுஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இளையராஜா என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்கவும் இதில் இளையராஜாவின் இளமைக்கால வாழ்க்கை, சென்னைக்கு அவர் சினிமா வாய்ப்பு தேடி வரும் காலகட்டம் வரை முதல் பாகமாகவும், பிறகு அன்னக்கிளி படத்துக்கு இசையமைத்து அவரது வெற்றி பயணத்தை துவங்கியது முதல் இன்று வரை 2ம் பாகமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்த படம் அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்தும் அடுத்தக்கட்டமாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. இந்த படம் எப்போது ஷூட்டிங் துவங்கும் என்றும் தெரியவில்லை. நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வரும் நிலையில் இளையராஜா படத்தில் அவர் எப்போது நடிக்க போகிறார் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி இளையராஜா படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சரியாக 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படத்தின் ஷூட்டிங் அல்லது ஷூட்டிங் தேதி குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததது இளையராஜா ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. இந்த படத்தை இயக்க கமிட் ஆன இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்போது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





