நடிகை நயன்தாரா, மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இயக்குநர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தில்தான் நயன்தாரா அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகு ரசிகர்களை கிறங்கடித்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம்கவர்ந்த நடிகையாக மாறினார்.
ரஜினியுடன் நடித்த சந்திரமுகி, சூர்யாவுடன் நடித்த கஜினி, எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த கள்வனின் காதலி, விஜயுடன் நடித்த வில்லு, தனுஷ் உடன் நடித்த யாரடி நீ மோகினி போன்ற சில படங்கள் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. குறிப்பாக சிம்புவுடன் நடித்த வல்லவன் படம் பேசப்பட்டது.
முதலில் ஹீரோவுக்கு ஜோடியாக மட்டுமே நயன்தாரா அதன்பின் அவரை மையப்படுத்திய கதைகளில் நடிக்க துவங்கி, முன்னணி நடிகையாக மாறினார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவுக்கு அவரது ஸ்டேட்டஸ் தமிழ் சினிமாவில் உயர்ந்தது. இப்போது ஒரு படத்துக்கு ரூ. 12 கோடி சம்பளம் என்னும் அளவுக்கு வேற லெவலில் இருக்கிறார் நயன்தாரா.
தமிழ் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில், நயன்தாரா நடித்துள்ள 75வது படம் அன்னபூரணி. கடந்த 1ம் தேதி இந்த படம் வெளியானது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெய், நடிகை நயன்தாரா, டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர். விஜே அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அப்போது பேசிய விஜே அர்ச்சனா, லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை அழைக்க, அய்யய்யோ, ப்ளீஸ் அதை மட்டும் சொல்லாதீங்க, சொன்னாவே எல்லாரும் திட்டறாங்க என கெஞ்சியபடி பேசினார். தொடர்ந்து அதுகுறித்து பேசிய நயன்தாரா, இன்னும் நான் அந்தளவுக்கு, அந்த இடத்துக்கு வரவில்லையோ என நினைக்கிறேன். நான் பெண் என்பதால், அதை மக்கள் ஏத்துக்க மாட்டேங்கறாங்களோ என்றும் கூட எனக்குத் தோன்றுகிறது.
இந்த டேக்கை பார்த்தா 10 பேர் பெருமையா சந்தோஷமா பாராட்டுறாங்க, 50 பேர் திட்டறாங்க. ஆனா இந்த டேக்கை வைத்து நான் என்னோட படங்களை தேர்வு செய்வதில்லை. கதைகளை செலக்ட் பண்றது இல்லை. ஸ்கிரிப்ட் பார்க்கறது இல்லே. இந்த சூப்பர் ஸ்டார் டேக்கைமக்கள் என் மீது வைத்திருக்கிற அளவு கடந்த அன்பா மட்டும்தான் இதை பார்க்கிறேன், என்று கூறியிருக்கிறார் நடிகை நயன்தாரா.





