இயக்குனர் கௌதம் மேனன் பல வெற்றிப் படங்களை தந்தவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் நடிகராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் கௌதம் மேனன். குறிப்பாக லியோ, விடுதலை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பில் அழுத்தமும், தனித்துவமும் தெரியும். எப்போதுமே ஒரு ஆளுமை மிக்க படைப்பாளியாக கௌதம் மேனன் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனால் அவரது இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம், பல விதங்களில் அவருக்கு நெருக்கடியை கொடுத்தது. விக்ரம் நடிப்பில் உருவான அந்த படத்தை திரைக்கு கொண்டு வர முடியாமல் பல ஆண்டுகளாக அவர் போராடி வருகிறார். அதனால் நடிப்பை விட்டுவிட்டு, இனி இயக்குனராக தன் பயணத்தை தொடர கௌதம் மேனன் முடிவு செய்திருக்கிறார்.
இதுவரை இயக்குனர் கௌதம் மேனன் சொந்தமாக கதையை எழுதி, திரைக்கதை, வசனம் எழுதி முழு ஸ்கிரிப்டையும் அவரே உருவாக்கி, படத்தை இயக்கினார். ஆனால் இப்போது சிறந்த கதைகளை, திரைக்கதைகளை இயக்கும் ஒரு அதிரடி முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
அதன்படி இயக்குனர் வெற்றிமாறன் கதையை, இயக்குனர் கௌதம் மேனன் டைரக்ட் செய்ய உள்ளார். இதற்கு வெற்றிமாறனும் ஓகே சொல்லி விட்டார். விடுதலை, விடுதலை 2 படங்களில் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் வெற்றிமாறன் கதையை, கௌதம் மேனன் திரைப்படமாக இயக்குகிறார்.
இதற்கிடையே இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஹீரோ சிம்பு என்றும் முதல்கட்ட தகவல் வெளியானது. ஆனால் 2 ஆண்டுகளாக கௌதம் மேனனும் சிம்புவும் பேசிக்கொள்வதில்லை. அதுமட்டுமின்றி சிம்பு, ஏற்கனவே நிறைய கமிட்மெண்டுகளில் இருக்கிறார் என்பதால், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





