இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். தி கோட் என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. இந்த படம் 445 கோடி ரூபாய் வசூலித்து, கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் வசூலில் முதலிடம் பிடித்தது.
தி கோட் படப்பிடிப்பை முடித்தவுடன் நடிகர் விஜய், எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. கடைசியாக கொடைக்கானலில் சில நாட்கள் விஜய் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த சூழலில் இப்போது கரூர் சிவகங்கை ஈரோடு மதுரை என சில பகுதிகளில் மட்டும் விஜய் இல்லாமல் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதாவது தேர்தல் நடப்பது போலவும், வாக்கு சாவடி மையங்களில் மக்கள் வந்து ஓட்டுப் போடுவது போலவும் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இது வலிமையான அரசியல் படமாக தான் இருக்கும் என்று உறுதியாகி விட்டது.
இந்நிலையில் மதுரையில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் பொதுமக்கள் ஓட்டு போட வாக்கு சாவடி மையங்களுக்கு வருவதும், அங்கு அவர்களை கோட் சூட் போட்ட அடியாட்கள் தடுத்து அடித்து விரட்டுவது போலவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் நிழல்கள் ரவியும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
ஆனால் அவர் தேர்தல் துறை அதிகாரியா, அல்லது பொதுமக்களில் ஒருவரா அல்லது வேறு ஏதேனும் கேரக்டரில் நடித்திருக்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தவெக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் ஜேவி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதாவது நடிகர் விஜயின் முழுப் பெயர் ஜோசப் விஜய். சினிமாவில் அவர் நடிகர் விஜய் என்றே அழைக்கப்படுவதால் பலருக்கும் அவரது முழுப்பெயர் ஜோசப் விஜய் என்பதே தெரியாது. இந்த சூழலில் புஸ்லி ஆனந்த் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஜேவி தளபதி என்று கூறியதால் பலரும் குழம்பிப் போய்விட்டனர். இதில் ஒரு தரப்பினர் ஜனநாயகன் விஜய் என்பதை தான் ஜேவி என்கிறாரா என்றும் கலாய்த்தும் வருகின்றனர்.





