கரூரில் நேற்று இரவு நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நடிகர் விஜய் மீதும் அவரது கட்சி நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி 4 பிரிவுகளின் கீழ் கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கரூருக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலில் இந்த சம்பவத்தில் குற்றம் செய்தது திமுக அரசுதான். அவர்கள் இந்த நெருக்கடியான இடத்தை ஒதுக்கியது முதல் தவறு.
அதே போல் இந்த சம்பவத்தில் 40 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்தான் முதல் பொறுப்பு. அதனால் கலெக்டர் எஸ்பி மீது பணிநீக்கம் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். உடனடியாக அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சி தலைவராக விஜய்க்கு கூட்டத்தை அழைக்க உரிமை உள்ளது. அதே போல் விஜயை பார்க்க வர பொதுமக்களுக்கும் உரிமை உள்ளது. அதற்கான பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை திமுக அரசு செய்யத் தவறிவிட்டது. இதுதான் இந்த 40 உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணம்.
மேலும் நடிகர் விஜய் வார இறுதிநாட்களில் சனிக்கிழமை போன்ற நாளில் மக்கள் சந்திப்பு பயணம் வருவதை தவிர்க்க வேண்டும். அதனால் குழந்தைகள் பெண்கள் அதிகமாக வருகின்றனர். பயண வடிவமைப்பில் அவர் மாற்றம் செய்ய வேண்டும். அதே போல் போலீஸ் கரூரில் 3 மணி முதல் இரவு 10 மணி வரை எப்போது வேண்டுமானாலும் விஜய் வந்து பேச அனுமதி தந்துள்ளனர்.
அது மிகப்பெரிய தவறு. குறிப்பிட்ட 2 மணி நேர கால அவகாசம் மட்டுமே அவர் வந்து பேச அனுமதி தந்திருக்க வேண்டும். பொறுப்பு டிஜிபி சொன்னது போல் இங்கு 500 போலீசார் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. கரூரில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு விஜய் காரணமல்ல, திமுக அரசின் அலட்சியமான நிர்வாகம்தான் காரணம். ஒரு நபர் நீதிபதி கமிஷன் விசாரணையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.





