ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தெலுங்கில் நட்சத்திர நடிகராக உள்ள பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான படம் ஓஜி. இந்த படம் இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. எனினும் படத்தில் 40 நிமிடங்கள் வரை பவன் கல்யாணுக்கு பதிலாக டூப் நடிகர் ஒருவர் நடித்திருப்பதாக படம் பார்த்த ரசிகர்களிடையே புகார் எழுந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த படத்துக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் தமன். இவர் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் என்ற படத்தில் தமன் நடித்திருப்பார். அதன்பிறகு தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இசையில் பெரிய நட்சத்திரமாக மாறியிருக்கிறார். தமிழில் வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஓஜி படத்தில் பின்னணி இசை பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் இசையமைப்பாளர் தமனுக்கு குவிந்து வருகிறது. வேற லெவலில் ஓஜி படம் இருப்பதற்கு முக்கிய காரணமாக இசையமைப்பாளர் தமன்தான் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசனும் இசையமைப்பாளர் தமனும் நெருங்கிய நண்பர்கள். பல ஆண்டுகளாக அவர்களுக்குள் நட்பு நீடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஓஜி படத்துக்காக 2 பாடல்களை பாடி தருமாறு சிம்புவிடம் தமன் கேட்டிருக்கிறார். நெருங்கிய நண்பர் கேட்பதால் 8 மணி நேரம் வரை நேரம் ஒதுக்கி சிம்புவும் அந்த 2 பாடல்களை பாடி தந்திருக்கிறார்.
ஓஜி படம் வெளியான பிறகு படத்தில் அந்த 2 பாடல்களும் வருகின்றன. ஆனால் சிம்புவின் குரல் அதில் நீக்கப்பட்டு வேறு பாடகர்கள் பாடியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பாடல்களை பாடிய சிம்பு அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கான காரணமும் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49வது படம் விரைவில் ஷூட்டிங் துவங்க உள்ளது.
இந்த படத்துக்கு இசையமைக்க தனக்கு வாய்ப்பு தருமாறு இசையமைப்பாளர் தமன், சிம்புவிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அது இயக்குனர் வெற்றிமாறன் முடிவு என்பதால் தமனுக்கு சிம்பு பதில் சொல்லாமல் தவிர்த்துள்ளார். இதனால் கடுப்பான தமன், சிம்பு பாடிய பாடல்களை ஓஜி படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு பாடகர்களை வைத்து அந்த பாடல்களை படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.





