மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன் சண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஜய பிரபாகரன் தேமுதிக கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இதே தொகுதியில் தான் நடிகை ராதிகா சரத்குமாரும் பாஜக சார்பில் போட்டியிட்டார்.
ஆனால் இருவருமே அந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சினிமாவில் தனது தந்தையை போல பிரபல நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வருகிறார்.
அவர் சகாப்தம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மதுர வீரன் படை தலைவன் ஆகிய படங்களில் சண்முக பாண்டியன் நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்திருந்தார்.
அவருடன் கதாநாயகியாக தார்னிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த வாரத்தில் வெளியான இந்த படம் இதுவரை 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற போதிலும் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. அடுத்து திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் சண்முக பாண்டியன் கமிட்டாகி இருக்கிறார்.
இன்னும் விஜயகாந்தின் 2 மகன்களுக்குமே திருமணம் ஆகவில்லை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறியதாவது, நானும் என் அண்ணனும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் இல்லை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போதே அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். நிறைய இடங்களில் பெண் பார்த்தோம்.
ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. பிறகு அண்ணன் அரசியலில் இறங்கி விட்டார். நானும் அம்மாவும் அப்போது உடல் நலம் சரியில்லாமல் இருந்த அப்பாவை பார்த்துக்கொண்டோம். இதனால் திருமணம் பற்றி மீண்டும் நாங்கள் யோசிக்கவில்லை. அப்பா எங்களுக்கு திருமணம் செய்து வைக்க மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் கடைசிவரை அது நடக்கவில்லை என்று நடிகர் சண்முக பாண்டியன் வருத்தமாக கூறியிருக்கிறார்.





