மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாளத்தில் அவர் நடித்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. கடந்தாண்டில் வெளியான துடரும் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து வசூலை அள்ளிக் குவித்தது.
தொடர்ந்து தற்போது சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 3 படமும் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. ஏற்கனவே திர்ஷ்யம் 1 திரிஷ்யம் 2 என இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்த திரிஷ்யம் 3 படமும் அமோகமான வரவேற்பை பெற்று வசூலை குவித்துள்ளது.
இதையடுத்து நடிகர் மோகன்லால் நடிப்பில் அதிமனோகரம் என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் ரன் சண்டக்கோழி புதிய கீதை மம்பட்டியான் திருமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமனோகரம் மலையாள படத்தை தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். திரைக்கதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது இந்நிலையில் இந்த தகவலை இயக்குனர் தருண் மூர்த்தி மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் தருண் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இது முற்றிலும் பொய்யான தகவல். கடந்த 78 நாட்களாக தொடுபுழாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். மழையும் வானிலை மாற்றங்களும் எங்களது திட்டங்களை பாதித்துள்ளன என்பது உண்மைதான்.
ஆனால் எங்கள் படக்குழுவினர் ஒவ்வொரு சவாலையும் முறியடித்து மிகுந்த உற்சாகத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறோம். தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது விளம்பரத்திற்காக சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் பகிரவோ பரப்பவோ வேண்டாம் என்று இயக்குனர் தருண் மூர்த்தி அந்த பதிவில் விளக்கமாக கூறியிருக்கிறார். இதையடுத்து மோகன்லால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.





