விடாமுயற்சி படம் துவங்குவதற்கு முன்பே, அந்த படத்துக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதாவது எச். வினோத் இயக்கிய துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படம் எடுக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தின் இயக்குநராக முதலில் அஜீத்குமார் செல்க் செய்தது நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனை தான்.
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜீத்குமார் படத்தை இயக்கப் போகிறேன் என அவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருந்தார். நயன்தாராவும் மிகப்பெரிய சந்தோஷப்பட்டார். ஆனால் திடீரென அழைத்த அஜீத், உங்கள் கதை எனக்கு பிடிக்கவில்லை என விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார்.
அதற்கு பின் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியன் மறைவு, அதைத் தொடர்ந்து அஜீத்குமார் வெளிநாடுகளில் பைக் டூர் சென்றது, அதன்பிறகு புதிய கதையை தேர்வு செய்ய பல மாதங்களை அஜீத் செலவு செய்தது, மகிழ் திருமேனி கதையில் மாற்றங்கள் செய்தது என ஓராண்டுக்கு மேல் விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்க தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழலில்தான், கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி அஜர்பைஜானில் படப்பிடிப்பை துவங்கினர். அதிலும் துவங்கிய சில வாரங்களில் படத்தின் கலை இயக்குநர் மிலன் மறைவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு மணல் புயல், கடும் குளிர், மழை, சூறாவளி என பல பிரச்னைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு மிக மெதுவாக நடந்து வருகிறது.
இப்போது அஜர்பைஜானில் கடந்த 12ம் தேதி முதல் காத்திருக்கும் விடாமுயற்சி படக்குழு இன்னும் படப்பிடிப்பை துவங்கவில்லை. அதற்கு காரணம், அங்கு இப்போது செட் ஒர்க் ஒன்று நடந்து வருகிறது. இதை முடித்த பின்பே படப்பிடிப்பு துவங்கும். மேலும், பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பை முழுமையாக முடித்தாக வேண்டும். அதுவரை தான் அஜீத்குமார் கால்ஷீட் தந்துள்ளார். மார்ச் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க உள்ளார்.
இன்னும் படப்பிடிப்பை துவங்க முடியாத நிலையில், பிப்ரவரி இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி தவித்து வருகிறார். இதற்கிடையே, சென்னையில் அஜீத்குமார் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்துக்கான பூஜை நடந்துள்ளது. அஜீத் ஏற்பாட்டில் நடந்த இந்த பூஜையில், படக்குழுவினர் சிலர் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது ஆபீஸ் துவக்கவிழா பூஜை என்றும் கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் விடாமுயற்சியை முடிக்கும் முன்பே, அடுத்த படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளை அஜீத்குமார் முடுக்கி விட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.





