நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் கர. இந்த படத்தை போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் டி55 படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்போது கர படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்திருக்கிறார். பேங்க் மேனேஜராக வரும் ஜெயராம். அப்பாவி மக்களின் வீட்டு பத்திரங்களை வாங்கி ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்வதுதான் கதை என்று சொல்லப்படுகிறது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் நாயகனாக தான் படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த கதையை பார்க்கும் போது இது கடந்தாண்டில் வெளியான நடிகர் விதார்த் நடித்த படத்தின் கதை தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த கதை அந்த படத்தில் இருந்து சுடப்பட்டதுதான் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியான படம் மருதம். இந்த படத்தின் நாயகன் விதார்த். ஏழை விவசாயியான அவர் தனது மகன் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். தனது பிள்ளையை கான்வென்ட் பள்ளியில் சேர்க்கும் விதார்த், அதற்காக தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து வட்டிக்கு கடன் வாங்குகிறார்.
ஆனால் அவரது நிலத்தை வங்கி வாங்கிய கடனுக்காக ஏலம் விட்டுவிடுகிறது. பிறகுதான் அந்த தகவல் விதார்த்துக்கு தெரிய வருகிறது. நிலத்தை சொந்தம் கொண்டாட சிலர் வரும் நிலையில் விதார்த் அவர்களுடன் சண்டையிடுகிறார். வங்கியிலும் சென்று தகராறு செய்கிறார். ஒரு கட்டத்தில் தன் அப்பா கடன் வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்யப்பட்டதை தெரிந்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் சட்ட ரீதியாக போராடி சரியான ஆவணங்களை காட்டி தனது நிலத்தை ஏழை விவசாயி விதார்த் மீட்பதுதான் கதை. இயக்குனர் வி கஜேந்திரன் இயக்கிய இந்த படம் மிகவும் அழுத்தமான கதை கொண்ட சமுதாய கருத்துள்ள சிறந்த படமாகும். அந்த படத்தை தான் தனுஷ் நடிப்பில் பட்டி டிங்கரிங் பார்த்து கர படமாக உருவாக்கி உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.





