தமிழ் சினிமாவில் வளரும் கதாநாயகனாக இருப்பவர் நடிகர் மணிகண்டன். டப்பிங் கலைஞர் ஸ்கிரிப்ட் ரைட்டர் உதவி இயக்குனர் மிமிக்ரி கலைஞர் என பல அடையாளங்களை கொண்டவர். மொத்தத்தில் திறமையான கலைஞன். ஆரம்பத்தில் காதலும் கடந்து போகும் நெற்றிக்கண் ஏலே போன்ற படங்களில் நடித்த அவருக்கு காலா படம் நல்ல அறிமுகத்தை தொடர்ந்தது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடிகர் மணிகண்டன், ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜெய்பீம் படமும் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்த குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் படங்களில் நடித்து அந்த 3 படங்களுமே ஹாட்ரிக் வெற்றியை நடிகர் மணிகண்டனுக்கு கொடுத்திருக்கிறது.
இப்போது மக்கள் காவலன் என்ற படத்தில் நடிகர் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனரின் அடுத்த படத்திலும் நடிக்க நடிகர் மணிகண்டன் கால்ஷீட் தந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன், குடும்பஸ்தன் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் மணிகண்டன் கூறியதாவது, குடும்பஸ்தன் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது நான் குட்நைட் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். முதலில் இந்த படத்தின் கதை நடிகர் அசோக் செல்வனுக்குதான் சொல்லப்பட்டது. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் என்னை படத்தின் கதையை கேட்கச் சொன்னார்கள். கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஹீரோ என்றால் யாருக்கும் அடங்காதவன், வீட்டுக்கு பணம் தராதவன், 4 பேரை தூக்கிப்போட்டு அடிப்பவன் என்றுதான் கேரக்டர் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் குடும்பஸ்தன் படத்தின் கதாசிரியர் பிரசன்னா கதையைச் சொன்னதும், எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. ஏன் இப்படியான கேரக்டர் கதாநாயகனாக இருக்கக் கூடாதா? அவர்களது வாழ்க்கையில் சுவாரசியங்களை இருக்காதா? இந்த கேரக்டர் ஏன் கதாநாயகனாக இருக்கக் கூடாது என்ற கேள்வியே இந்த படத்தில் என்னை கமிட் செய்து விட்டது.
குட்நைட் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பின் போது குடும்பஸ்தன் படத்தின் மொத்த கதையையும் என்னிடம் கொடுத்தது மட்டுமில்லாமல், தனது கல்யாண பத்திரிகையும் கதாசிரியர் பிரசன்னா கொடுத்தார். இரண்டையும் கொடுத்துவிட்டு கதை பிடித்திருந்தால் கல்யாணத்துக்கு வாங்க எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். முழுக்கதையும் படித்துப் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்துப் போனது. பிரசன்னாவின் திருமணத்திற்கு சென்று விட்டேன் என்று நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார். தனது திருமண அழைப்பிதழ் தந்து எமோஷனல் டச்சிங்கில் மணிகண்டனை, கதாசிரியர் ஹீரோவாக நடிக்க சம்மதம் வாங்கி விட்டாரே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





