மலையாள படங்களுக்கு என்று தனித்துவம் உண்டு. மலையாளத்தில் ஆபாச படங்கள் வந்து, அவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு பெற்றிருந்தாலும் யதார்த்த சினிமாக்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு மலையாள சினிமா பல அம்சமான படங்களை தந்திருக்கிறது. ஹீரோயிசம் இல்லாத ஹீரோக்கள் இருப்பது மலையாள சினிமாவில் மட்டும்தான்.
அங்கு ஹீரோக்களுக்காக கதைகள் இல்லை; கதைகளில் நடிக்கும் கேரக்டர்களில்தான் நடிகர்கள் தங்களை பொருத்திக்கொள்ள வேண்டும். அதனால் அங்கு நடிப்பும், கேரக்டரும்தான் பேசுமே தவிர, ஹீரோயிசத்துக்கு நடிகர்களுக்கும், இயக்குனர்களும் அதிக முக்கியத்துவம் தர மாட்டார்கள்.
ஆனால் இப்போது மலையாள சினிமாவில், பெண்கள் பாலியல் சீண்டல் விவகாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இந்த பிரச்னையில் மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) கலைக்கப்பட்டு விட்டது. சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இதுவும் இப்போது கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
மலையாள நடிகை பத்மபிரியா தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், சத்தம் போடாதே உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிக பரிச்சயமானவர். ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து நடிகை பத்மப்பிரியா, மிக ஆவேசமான தனது கருத்துகளை வெளிப்படுத்தி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பத்மப்பிரியா கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்தது ஏன், யாருக்காக இதை வெளியிடவில்லை என அரசு விளக்கம் சொல்ல வேண்டும். கூண்டோடு பதவிகளை ராஜினாமா செய்த நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பும், தலையும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளனர்.
மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. அதன் கையில்தான் எல்லாமே இருக்கிறது. அதனால்தான் வாய் திறக்க பலரும் மறுக்கின்றனர். இது ஒரு பாலியல் பிரச்னையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் ஒரு வியாபார பொருள் மட்டும்தான். எனக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குறைந்தது குறித்த காரணங்கள் எனக்கு நன்றாகவே தெரியும் என்று பத்மபிரியா கூறியிருக்கிறார்.





