தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக மக்களால் போற்றப்படுகிறார். பாரதிராஜா, பலர் பிரபல இயக்குனர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார். நடிக்கும் ஆசையில் பலர் சினிமாவுக்கு வர காரணமாக இருந்திருக்கிறார். பாரதிராஜா படங்களை பார்த்து, பாரதிராஜா போல் இயக்குனராக வேண்டும் என்ற ஆசைப்பட்டு வந்தவர்கள் தான் இயக்குனர் பாக்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, அமீர் போன்றவர்கள்.
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே, புதிய முயற்சிகளை செய்து சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். பரிசோதனை முயற்சிகளை சில இயக்குனர்கள் துணிச்சலாக அதை செய்து வெற்றி பெறுவார்கள். எல்லா காலகட்டத்திலும் இதுபோன்ற இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். கே பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, இயக்குனர் பாலா வெற்றிமாறன் போன்றவர்கள் அந்த வரிசையை சேர்ந்தவர்கள்தான்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா, சினிமாவை வேறு மாதிரியான ஒரு தளத்தில் கொண்டு சென்று கள்ளிக்காடும், செம்மண் புழுதி நிறைந்த கிராமப்புறங்களையும், அங்கு வாழும் யதார்த்த மக்களையும் தனது படைப்புகளின் கதாபாத்திரங்களாக்கி திரைக்கு கொண்டு வந்தவர். அப்போதெல்லாம் சினிமா ஷூட்டிங் என்றாலே ஸ்டுடியோவில்தான் நடக்கும்.
ஏவிஎம் ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, வாகினி ஸ்டுடியோ போன்ற ஸ்டுடியோக்களில் மட்டுமே படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இல்லை அல்லது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் தான் படங்களை எடுப்பார்கள். ஆனால் பாரதிராஜா மட்டும் கிராமங்களுக்கு கேமராவை தூக்கிக் கொண்டு சென்றார்.
பாரதிராஜா இயக்கிய படங்களில், இன்னும் பெயர் சொல்கிற படம் 16 வயதினிலே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, காந்திமதி, நடித்த இந்த படம், அந்த காலகட்டத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இருந்தது. இதில் கமல் சம்பளம் 15,000, ஸ்ரீதேவி சம்பளம் 10,000, ரஜினி சம்பளம் 3,000 என்றுதான் சம்பளம் பேசியிருக்கிறார் பாரதிராஜா. இதில் இன்னும் ரஜினிக்கு 500 ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார் பாரதிராஜா.
அப்போது 16 வயதினிலே படத்தை எடுக்க மொத்த பட்ஜெட் 4,75,000 ரூபாய்தான். இப்போதெல்லாம் ஒரு நாள் ஷூட்டிங்குக்கு பல லட்சம் செலவு செய்கிற சூழலில் அன்று ரூ. 4.75 லட்சம் ரூபாய்தான் மொத்த பட்ஜெட்.இந்த படம் எடுத்த போது, தயாரிப்பாளரிடம் சில நாட்கள் பணமே இருக்காது. இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கேமராவில் பிலிம் ரோல் போடாமல் கமலை நடிக்க சொல்லி படம் எடுத்து சினிமா சூட்டிங் நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்கிறார் பாரதிராஜா. ஒருகட்டத்தில் கமலுக்கும் இது தெரிந்து விட்டது. ஆனால் அதற்காக கமல் கோபப்படாமல் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார். இப்படி எடுக்கப்பட்ட 16 வயதினிலே படம், இன்றும் மிகச் சிறந்த படமாக ரசிக்கப்படுகிறது.





