சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச் வினோத். சமூகத்தில் பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் பணப்பறித்து ஏமாற்றுபவர்களையும், அவர்கள் பின்னால் இருக்கும் லாபிகளையும் தோலுரித்துக் காட்டினார் ஹெச் வினோத்.
அதுவும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் ஒவ்வொன்றும் கத்தி போல கூர்மையாக இருந்ததால், சதுரங்க வேட்டை திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. இதன்பிறகு கார்த்தியுடன் இணைந்த வினோத், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கினார்.
90களில் தமிழ்நாட்டை மிரட்டிய வடமாநில கொள்ளையர்களையும், அவர்களைப் பிடிக்க தமிழ்நாடு போலீஸ் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் கண்முன்னே காண்பித்தார் வினோத். உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல் ஹெச் வினோத்திற்கும் நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
இப்படி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களின் மூலம் உயரத்திற்குச் சென்ற வினோத், அடுத்ததாக அஜித்துடன் இணைந்தார். அவரை வைத்து எப்படிப்பட்ட படத்தை இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, யாரும் எதிர்பாக்காத வகையில் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையை அவர் இயக்கினார்.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற அடுத்ததாக, வினோத் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்பிறகு, மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்த வினோத் துணிவு திரைப்படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது அவர் கமல்ஹாசன் உடன் இணைந்திருக்கிறார்.
ராணுவப் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில், சித்தார்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்குப் பிறகு, கார்த்தியுடன் வினோத் இணையப் போகிறாராம். இது தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. இந்த தகவலால் உற்சாகம் அடைந்திருக்கும் ரசிகர்கள், வினோத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.





