விஜய் டிவியில் மிக பிரபலமான ரியாலிடி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசன்களாக தொடர்ந்து நடந்தது. 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வாரந்தோறும் சனி, ஞாயிறு தினங்களில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கும் போட்டியாளர்களுக்கு தரப்படும் டாஸ்க், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், மனஸ்தாபங்கள், கோபங்கள் குறித்து கேள்வி கேட்கும் கமல், ஞாயிறு தோறும் குறைந்த ஓட்டுகளை பெற்ற போட்டியாளரை வெளியேற்றுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை, கமல்ஹாசனின் பங்களிப்பு மிகப்பெரிய பலமாக இருந்தது. வாரத்தில் மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட, கமல் வரும் நாட்களில் சனி, ஞாயிறு கட்டாயம் விஜய் டிவி பார்க்க அமர்ந்துவிடும் அளவுக்கு கமல் பேச்சு, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
வருகிற அக்டோபர் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 துவங்க ஆயத்த ஏற்பாடுகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனால் இனி அடுத்த தொகுப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிடி ஷோ கோடீஸ்வரன் நிகழ்ச்சி. இதை நடிகர்கள் பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதனால் இவர்களில் யாரேனும் ஒருவர் பிக்பாஸ் தொகுப்பாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அதில் ஆர்வமும், விருப்பமும் உள்ளதா என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவலாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதியை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிகிறது. அவர் நிறைய படங்களில் கமிட் ஆகி இருப்பதால், அவர் வர மறுக்கும் பட்சத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தொகுப்பாளராக கமிட் செய்யவும் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நயன்தாரா, கேரளாவில் லோக்கல் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பது இதில் கூடுதல் தகவலாகும்.





