தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் அஜீத்குமார். ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் தல என ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் அன்போடு அழைத்த நிலையில், என்னை அஜீத்குமார் அல்லது ஏகே என்று மட்டுமே அழையுங்கள். வேறு எந்த பட்டப் பெயரும் என் பெயருக்கு முன்னால் வேண்டாம் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது ரசிகர் மன்றங்களையும் கலைக்க ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
அஜீத்குமார் முதலில் செய்த இந்த அதிரடியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தன்னை கமல் அல்லது கமல்ஹாசன் என அழையுங்கள். கலைஞானி உலக நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் ஆண்டவர் நம்மவர் என எந்த பட்டமும் வேண்டாம் என்று கூறினார்.
கடந்த மாதத்தில் நடிகை நயன்தாராவும் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், என்னை யாரும் இனி லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள். நயன்தாரா என எனக்கு நெருக்கமான என் பெயரில் மட்டும் அழையுங்கள் என்று கூறிவிட்டார். இப்படி முன்ணி நடிகர் நடிகைகள் தங்களது பட்டங்களை துறக்க முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் அஜீத்குமார் என்பது கவனிக்கத்தக்கது.
சினிமாவில் நடிப்பதை விட பலமடங்கு ஆர்வம் நடிகர் அஜீத்குமாருக்கு விளையாட்டில் இருந்து வருகிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே பைக் ரேஸ்களில் அவர் பங்கேற்றிருக்கிறார். கார் ரேஸ் ரைபிள் சுடுதல் அவருக்கு மிக பிடித்தமான போட்டிகளாகும். நண்பர்களுடன் பைக்கில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் ரைடு செல்வது அஜீத்குமாருக்கு மிகவும் பிடிக்கும்.
விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களில் நடித்த பிறகு இப்போது 3 மாதங்களாக வெளிநாடுகளில் நடந்துவரும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். வரும் அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் நடக்க உள்ளது. அதனால் அடுத்து நடிகர் அஜீத்குமார் படம் குறித்த ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் குட்பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்கப் போவது நான்தான். என்னுடைய அடுத்த படமும் அஜீத்குமார் சாருடன்தான் என்று பகிரங்கமாக கூறிவிட்டார். அதனால் அஜீத் ரசிகர்கள், காட் பிளஸ் யூ மாமே என்று ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





