தமிழ் சினிமாவில் எப்போதுமே வித்யாசமான படைப்பாளிகள், ரசிகர்களை வெகுவாக எளிதில் கவர்ந்து விடுகின்றனர். வழக்கமான கதைகளை திரைப்படமாக ஆக்காமல் வித்யாசமான கோணங்களில் மாறுபட்ட கதைகளை திரையில் படமாக கொண்டு வந்து ரசிகர்களை அசத்தி விடுகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர்தான் இயக்குனர் செல்வராகவன்.
நடிகர் தனுஷ் என்ற ஒரு நல்ல கலைஞரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். தனது காதல் கொண்டேன் படத்தில் தனுஷை நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன போன்ற படங்களை செல்வராகவன் இயக்கினார்.
இதில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகமாக உருவாகி வருகிறது. அதே போல் புதுப்பேட்டை 2ம் பாகமும் வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதே போல் கார்த்தி பார்த்திபன் ரீமா சென் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானது. தியேட்டர்களில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், மிகச்சிறந்த படைப்பு என பாராட்டினர். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் குறித்த ஒரு அறிவிப்பை கடந்த 2021ம் ஆண்டில் இயக்குனர் செல்வராகவன் அறிவித்தார். அதில் நாயகனாக தனுஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
அதன்பிறகு 4 ஆண்டுகளாக அடுத்த நகர்வுக்கு ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் செல்லாத நிலையில், அந்த படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் இப்போது கூறியிருப்பதாவது, ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை தயாரிக்க மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் இணைய வேண்டும்.
இந்த படத்தில் நாயகனாக தனுஷ் நடித்தாலும் கார்த்தி இல்லாமல் இந்த பாகம் உருவாகாது. அதனால் தனுஷ் கார்த்தி இருவரும் ஒரு ஆண்டு கால்ஷீட் ஒதுக்கி தந்தால்தான் இந்த படத்தை எடுக்க முடியும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். தனுஷ் கார்த்தி இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஓராண்டு காலம் கால்சீட் என்பது அவர்கள் மனசு வைத்தால்தான் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது.





