நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு அண்மையில் ட்ரெய்லர் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு தனது கடைசி திரைப்படத்தில் நடிப்பதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறார் விஜய். இதற்கான படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான் இந்த படத்தை எடுக்கிறார்.
இது குறித்து இயக்குனரே விளக்கம் அளித்தார். ஆனால் இது அரசியல் சார்ந்த திரைப்படம் இல்லை என்றும், அது குறித்த சில காட்சிகள் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இப்படியான சூழலில் தான், அட்லியை சந்தித்திருக்கிறார் விஜய். இதனால், தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அடக்கி அவர் கொடுத்து விட்டாரோ என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் அதுதான் இல்லை. ஏற்கனவே அவர் விஜயை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக சில கருத்துக்களை எதிர்கொண்டாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. குறிப்பாக மெர்சல் திரைப்படம், வசூலில் புதிய சாதனையை படைத்தது.
ஒரு கமர்சியல் திரைப்படமாக வெற்றி இயக்குனர் என அட்லி பெயரெடுத்தாலும், அவர் இப்போது வரை காப்பி கேட் என்றே சிலரால் அழைக்கப்படுகிறார். இதற்குக் காரணம், திரைக்கதையை வலுவாக அமைக்க தெரிந்த அவருக்கு ஒரு கதையை எந்தவித படத்தின் தழுவலும் இல்லாமல் எழுத தெரியவில்லை என்பதுதான். இதன் காரணமாக, அவர் சில கருத்துக்களையும் எதிர்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் அட்லி இருவரும் சந்தித்திருக்கிறார்கள். பாடலாசிரியர் விவேகின் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தான் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மெர்சல் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட்டான ஆளப்போறான் தமிழன் பாடலை விவேக்தான் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் அவரது இல்ல நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.





