புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த ஏராளமான வெற்றிப் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதில் இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்த படம் கடந்த 1968ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தானே சுகம் சுகம் என்ற பாடல் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது. பஞ்சாபி பங்க்ரா நடனத்தில் உருவான இந்த பாடல் காட்சியில் எம்ஜிஆரும் நடனக் கலைஞரான எல் விஜயலட்சுமியும் இணைந்து ஆடியிருப்பார்கள்.
துள்ளலான இந்த பாடலுக்கு எம்எஸ் விஸ்வநாதன் இசையில் பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன் – பாடகி பி சுசீலா பாடியிருந்தார்கள். இந்த பாடல் காட்சியில் பந்து போல துள்ளி குதித்து எல் விஜயலட்சுமி துள்ளலாக நடனம் ஆடியிருப்பார். அதே போல் எம்ஜிஆரும் இந்த பாடல் காட்சியில் மிக பிரமாதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஆடியிருப்பார்.
இந்த பாடல் காட்சி குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, குடியிருந்த கோயில் படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு பாடல் காட்சியில் சிறந்த நடன கலைஞரான எல் விஜயலட்சுமி நடனம் ஆட வேண்டும் என்று இயக்குனர் சங்கர் சொன்ன போது அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று எம்ஜிஆரும் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அந்த பாடல் காட்சியில் அவருடன் இணைந்து தன்னால் சிறப்பாக நடனம் ஆட முடியாது என்று எம்ஜிஆர் முதலில் மறுத்து விட்டார். அதனால் நடன கலைஞர்களுடன் எல் விஜயலட்சுமி ஆடுவது போல் மாற்றி விடலாம் என்று இயக்குனர் சங்கரும் கூறிவிட்டார். ஆனால் அருகில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா அதை மறுத்து விட்டார்.
பங்க்ரா நடனம் என்பது பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான நடனம். அந்த உடையில் நீங்கள் நடனம் ஆடினால் பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என்று எம்ஜிஆரிடம் பேசி ஜெயலலிதா அவரை சம்மதிக்க வைத்தார். பிறகுதான் எம்ஜிஆர் பல நாட்கள் நடன பயிற்சி செய்து ஒத்திகை பலமுறை பார்த்து அந்த பாடல் காட்சியில் மிக அற்புதமாக நடனத்தை தந்தார் என்று சித்ரா லட்சுமணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





