தமிழ் சினிமாவை பொருத்தவரை இந்த ஆண்டில் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக தான் இருக்கின்றன. அதே போல் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக தான் இருக்கின்றன. 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் இணைந்த படங்கள் 8 மட்டும்தான்.
ஆனால் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பிறமொழி படங்கள், 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிப் பிரிக்கின்றன. சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் 1500 கோடி ரூபாய்க்கு 2 வாரங்களில் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. அதுவும் 2ம் பாகம் படம் என்றாலே பிளாப் ஆகிவிடும் தமிழ் சினிமாவில், தெலுங்கு படமாக அது சக்கைப் போடு போடுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டில் வெளியாகும் 13 படங்கள் குறித்த ஒரு பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறுமா, குறிப்பாக 1000 கோடி ரூபாய் வசூல் என்ற தமிழ் சினிமாவின் கனவை நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் தக்லைப் படம், எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 படம், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட்பேட் அக்லி படங்கள் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
அடுத்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா, தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிக்கடை, இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான், அதே போல் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களும் வரும் 2025ம் ஆண்டில் வெளியாகின்றன.
அதே போல் நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய அவரது 44வது படமும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45வது படமும் அடுத்த ஆண்டில் வெளியாகின்றன. ஜெயிலர் 2 படம் அடுத்த ஆண்டில் படப்பிடிப்பு துவங்கி, 2026ம் ஆண்டில்தான் வெளியாக உள்ளது. அதனால் 2025ம் ஆண்டில் வெளியாகும் 13 படங்களுமே அதிக கவனம் பெற்ற முக்கிய படங்களாக இருக்கின்றன.





