நடிகை நயன்தாரா, இன்று தமிழ் சினிமாவில் வேற லெவலில் இருக்கும் ஒரு நடிகையாக பார்க்கப்படுகிறார். கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். துவக்கத்தில் லோக்கல் டிவி சேனலில் காம்பியராக இருந்த அவரை, மலையாள இயக்குனர் ஒருவர் மானசிகாரே என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அவர்தான் நயன்தாரா என பெயரையும் மாற்றினார்.
அதன்பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில், சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக மாறிய அவர், இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வாங்குகிறார்.
நயன்தாரா நடிக்க வந்த ஆரம்பத்தில் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை அறிமுகத்தை தந்த படங்களில் ஒன்றுதான் கஜினி. இதில் சூர்யா, அசின் நாயகன், நாயகியாக நடித்திருப்பார்கள். இதில் 2வது கதாநாயகியாக, ஏறக்குறைய ஒரு கிளாமர் ரோலில் நடித்திருப்பார் நயன்தாரா.
இந்த படம், இப்போதும் ரசிகர்கள் மிகவும் விரும்பும் ஒரு படமாக இருக்கிறது. கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் கஜினி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களின் பேராதவுடன் நல்ல வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கஜினி தமிழில் ரி ரிலீஸ் செய்யப்பட்டாலும் நல்ல வசூலை பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் சஞ்சய் ராமசாமியாக சூர்யா அசத்தியிருப்பார்.
கஜினி படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 23 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, கஜினி படம் எடுத்த 2005 காலகட்டத்தில் கேரவன் வசதி கிடையாது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெயிலில்தான் நயன்தாரா உட்கார்ந்திருப்பார்.
அவருக்கு உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடைய வேலையை எல்லாம் அவரே செய்துக்கொள்வார். அவரது காஸ்ட்யூம் சரியில்லை என, பிளாட்பார கடைகளில் வாங்கிவந்த ஆடைகளை எல்லாம் அந்த படத்தில் அணிந்து நடித்தார். வில்லன்கள் துரத்தும் ஒரு காட்சியில், நயன்தாரா உடை மிக ஆபாசமாக இருந்தது. அப்போது லோக்கல் கடையில் வாங்கி வந்த ஒரு ஆடையை, காருக்கு பின்னால் டிக்கி மறைவில் ஒளிந்து நின்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்து நடித்துக் கொடுத்தவர் நயன்தாரா. அந்தளவுக்கு எளிமையாக அவர் நடந்துக்கொண்டார் என்று கூறியிருக்கிறார்.





