நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை 4 மாதங்களுக்கு முன்பே துவக்கி, அதிகாரபூர்வமாக அதை அறிவித்தும் விட்டார். தி கோட் படத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன், அதன்பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லி விடுவேன் என்றும் ஏற்கனவே அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கிடையே விஜய் கட்சி பெயரை மட்டுமே அறிவித்துள்ள நிலையில் கட்சிக்கொடி, கட்சியின் சின்னம், கட்சியின் கொள்கைள், கோட்பாடுகள், விஜய் அரசியல் எதிர்கால திட்டங்கள் என பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி, அதில் அரசியல் கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் விஜயே அறிவிப்பார் என்று தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.
ஒரு தரப்பினர், நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு சிறந்த நடிகர்.அவரது படங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி பார்க்கின்றனர். அதனால் அவர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். அரசியலுக்கு வந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு படமாவது அவர் நடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜயின் கட்சி மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாகவும், நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் மதுரையில்தான் முதல் கட்சி மாநாட்டை நடத்தியதாகவும், விஜயகாந்த் அரசியலில் பெரிய அளவில் சாதித்தது அங்கு மாநாட்டை நடத்தியதும் சென்டிமென்ட் ஆக இருப்பதால், விஜய் மதுரையில் மாநாட்டை நடத்துவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் மாநாட்டை திருச்சியில்தான் நடத்த இருக்கிறார் என்பது உறுதியாக முடிவாகி இருக்கிறது. அதுவும் தி கோட் படம் ரிலீஸ் ஆன பிறகுதான், கட்சி மாநாடு என்பதையும் விஜய் உறுதியாக கூறிவிட்டார். அதனால் திருச்சியில், 10 லட்சம் பேர் அமரும் வகையில், 10 லட்சம் இருக்கை வசதிகளுடன் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கோட் படம் ரிலீஸ் செய்யப்படுகிற நிலையில், சுபமுகூர்த்த நாளான செப்டம்பர் 21ம் தேதி, திருச்சியில் சமீபத்தில் விசிக மாநாடு நடத்திய அதே பகுதியில், இந்த மாநாட்டை நடிகர் விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆகவே, மதுரை அல்ல திருச்சியில் மாநாடு, அதுவும் தி கோட் படம் ரிலீஸ் ஆகி 2 வாரங்களுக்கு பிறகுதான் என்பதும் உறுதியாகி விட்டது. மாநாட்டு பணிகளுக்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகின்றன.





