வெற்றிமாறன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இதை தனது கனவு திரைப்படம் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் வெற்றிமாறன். சொல்லப்போனால் தனது முதல் திரைப்படம் ஆன பொல்லாதவனே, வடசென்னை திரைப்படத்தின் ஒரு சிறிய பாகம்தான் என்று அவர் தெரிவித்திருப்பார். ஒரு பைக் காணமல் போகும் கதையைத்தான் அதில் வளர்த்து எடுத்ததாக அவர் கூறியிருப்பார்.
ஏற்கனவே தனுசை வைத்து அவர் பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் என இரண்டு காவியங்களை எடுத்திருந்த நிலையில், வடசென்னை அவர்களது கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதனை சரியாக பூர்த்தி செய்து இருந்தார் வெற்றிமாறன்.
சாதாரண பலி வாங்கும் கதைதான் என்றாலும், அதனைக் கூறிய விதத்தில் வெற்றி பெற்றார் வெற்றிமாறன். ஒரு கொலை, அதனால் சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களிடையே ஏற்படும் மாற்றம், அந்தக் கொலைக்காக பழிவாங்க துடிக்கும் பெண் கதாபாத்திரம், இந்த வட்டத்திற்குள் தானாக வந்து சிக்கும் ஹீரோ என காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டியிருந்தார் வெற்றிமாறன்.
சொல்லப்போனால் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் முடியும்போதுதான், தனுசுக்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்து கிடைத்திருக்கும். இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தனித்தனியே எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துதான் ரசிகர்கள் கேட்பார்கள்.
இப்படியான சூழலில், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சிம்புவுடன் கைகோர்த்து இருக்கிறார் வெற்றிமாறன். இது தொடர்பான ப்ரோமோ சூட்டிங் நடைபெற்றது. அனேகமாக இது வடசென்னை படத்தின் முந்தைய பாகமாகதான் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு தனுஷ் தரப்பில் கிரீன் சிக்னல் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
வடசென்னை திரைப்படத்தை தனுஷ் தயாரித்திருந்த சூழலில், அது தொடர்பான கதாபாத்திரங்களை பயன்படுத்துவதற்கு என் ஓ சி சான்றிதழை தர மறுப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக சிம்பு வெற்றிமாறன் படத்திற்கான அறிவிப்பு தாமதமாவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் படத்தின் தலைப்பை மட்டும் மாற்றிக்கொண்டு, சிம்புவுடன் படத்தை இயக்குவதில் வெற்றிமாறன் உறுதியோடு இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். இருப்பினும் இது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் சினிமா விமர்சகர்கள் வெளியிடவில்லை





