தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளுக்குள் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதும் அவர்கள் விவாகரத்து என்ற இறுதிகட்ட முடிவை எடுப்பதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா ராய், ஜீவி பிரகாஷ் – சைந்தவி, ஆகியோரை தொடர்ந்து இப்போது லைவ்வில் இருப்பது ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து பஞ்சாயத்துதான் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். ஆர்த்தி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். தனது மாமியார் தயாரிப்பில் தான் சமீபத்தில் சைரன் 108, இறைவி போன்ற படங்களில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் மனக்கசப்பில் இருந்து வருவதாகவும், ஜெயம் ரவி தனது வீட்டுக்கு கூட செல்லாமல் தனது அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வதாகவும் ஒரு தகவல் பரவியது. ஒரு மாதத்திற்கு மேலாக கோவாவில் அவர் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த வாரத்தில் திடீரென நடிகர் ஜெயம் ரவி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும், இது தன்னுடைய சொந்த முடிவு என்றும் அதில் கூறியிருந்தார். மேலும் அவர் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரியும், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளவும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயம் ரவி இப்படி விவாகரத்து முடிவெடுத்தது அவரது தனிப்பட்ட முடிவு. என்று ஆர்த்தி கூறியதும் வைரலானது. இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவிக்கும், பாடகி கெனிஷா என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதால்தான் ஜெயம் ரவி தனது மனைவியை ஆர்த்தியை பிரிவதாகவும் ஒரு தகவல் பரவியது. இதற்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷா ஒரு உளவியலாளர். அவர் குறித்து யாரும் தவறாக பேச வேண்டாம். அவர் 600 மேடைகளுக்கு மேல் பாடியவர். அவரும் நானும் இணைந்து எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் அமைக்க உள்ளோம் என்றும் கூறியிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பாடகி கெனிஷா இப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். அந்த பதிவில், ஜெயம் ரவியிடம் நாகரிகமற்ற கேள்விகளை கேட்டுள்ளீர்கள். ஆனபோதும் அவர் அதற்கு சரியான பதில் கொடுத்து இருக்கிறார். அதனால் இனிமேலாவது உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் உங்கள் மனதில் இருக்கும் காயத்திற்கு எதிரி வேறு யாரும் இல்லை, நீங்களேதான். உண்மை தெரியாமல் தேவையில்லாத கற்பனையில் மிதந்து மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விடுங்கள். தயவுசெய்து கருணையுடன் இருங்கள். உண்மை என்னவென்று தெரியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம் என்று பாடகி கெனிஷா கூறி இருக்கிறார்.




