2024 ஆம் ஆண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் அயலானும் ஒன்று. 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால் கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீசான இந்த திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. டைம் டிராவல் என்னும் கான்செப்ட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட இதன் கதை, கடைசி வரைக்கும் சுவாரசியமாக இருந்ததால் இன்று நேற்று நாளை திரையரங்குகளில் ஜெயித்தது.
தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமா உலகினரால் கவனத்தைப் பெற்றார் அதன் இயக்குனரான ரவிக்குமார். அவரின் உழைப்பு சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துப் போக, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். இதை எடுத்து 2018 ஆம் ஆண்டு, அயலான் திரைப்படத்திற்கான வேலைகள் ஆரம்பித்தன. ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என சின்ன கான்செப்ட்டை கையில் எடுத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.
சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக முடிந்தாலும், கிராபிக்ஸ் வேலைகள் படத்தில் பெரியதாக இருந்ததால் அதன் பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. நடுவில் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டதால் அயலான் திரைப்படம் முடங்கி போனது. ஐந்து ஆண்டுகளாகியும் அது பற்றி பேச்சு எழாததால், கிட்டத்தட்ட அந்த திரைப்படம் வெளியாகாது என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில் திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டினார் சிவகார்த்திகேயன். இதற்கான வி எஃப் எக்ஸ் பணிகளை பேண்டோம் ஸ்டூடியோ எடுத்து செய்ய, அதற்கான வேலைகளும் சூடு பிடித்தன. இதில் ஹீரோயினாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரீ ஈவென்ட் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சிவகார்த்திகேயன், அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் கிராமத்தில் வசிப்பது போலவும், அங்கு பூச்சிகளால் விவசாயம் பாதிக்கப்படுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக நகரத்திற்கு வந்து அவர் ஓட்டுனராக செயல்படுவது போல் கதை நகர்கிறது. இந்த சமயத்தில் ஒரு ஏலியன் சிவகார்த்திகேயனிடம் வர, பரபரப்பாக காட்சிகள் நகர்வது போல் டிரைலர் அமைந்துள்ளது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தெரிகிறது. கலகலப்பு இங்கு கம்மி தான் என்பதும் அயலான் பட ட்ரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களால் கணிக்க முடிகிறது.





