2024 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சோதனை காலம் என்று தான் கூற வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன திரைப்படங்களை அதனை உணர்த்தின. பொங்கலன்று சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்க்கு மிஷன் சாப்டர் ஒன்று ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இதில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சில ஆண்டுகளாக, பொருளாதாரப் பிரச்சினையால் முடங்கி கிடந்த அந்த திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதை கண்டு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி கலவையான விமர்சனத்தை பெற்றது அயலான் திரைப்படம்.
இதே போல் கேப்டன் மில்லர் திரைப்படமும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன்று திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. இருப்பினும் வசூலில் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம், ரஜினிகாந்த் க்கு லால்சலாம் திரைப்படம் வெளியானது.
உண்மையில் சொல்லப்போனால் இங்கு பலருக்கும் அப்படி ஒரு திரைப்படம் வெளியானதா என்று கூட தெரியாது. அந்த அளவுக்கு, படத்தின் காட்சிகள் இருந்ததால் லால் சலாம் திரைப்படம் தோல்வியடைந்தது. இதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த ஒரு வகையிலும் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு திரைப்படங்களும் வெளியாகவே இல்லை.
மணிகண்டனின் லவ்வர் திரைப்படம் 2k கிட்ஸ்களால் மட்டும் கொண்டாடப்பட்டது. பெரிய நட்சத்திரங்களின் படமும் வெளியாகாததால், மலையாளத் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் மவுசு கூட ஆரம்பித்தது. மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, ஆவேசம் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். இதே போல் கில்லி உள்ளிட்ட ரீ ரிலீஸ் திரைப்படங்களும் பெருக ஆரம்பித்தன. இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்கு அல்ல என்று அப்போதே பலர் பல கூறி வந்தனர்.
தற்போது அந்த சூழலை எல்லாம் திருப்பி போட்டு இருக்கிறது சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள். ஒன்று சூரி நடிப்பில் வெளியான கருடன். இரண்டாவது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் மகாராஜா. இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் புருவத்தை உயர்த்தும் வகையில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ் சினிமா மீண்டும் தனது டிராக்கை பிடித்து விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





