இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது அவரத 69வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 படத்தின் பூஜை கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், இயக்குனர் எச் வினோத், படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தளபதி 69 படத்தின் பூஜையைத் தொடர்ந்து, 5ம் தேதி முதல் பையனூரில் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு நடிகர் விஜய் வருகிற 27ம் தேதி அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளதால், அந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு தனது தளபதி 69 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த முறை நடிகர் விஜய் 20 நாட்கள் படப்பிடிப்பு, 10 நாட்கள் கட்சிப் பணி என சூட்டிங் மற்றும் கட்சி பணியை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமலும், வாரம்தோறும் ஞாயிறு தினத்தில் கண்டிப்பாக பிரேக் எடுப்பதும் விஜயின் வழக்கமாக இருந்தது.
அவர் நடித்த தி கோட் படம் வரை இந்த ஷெட்யூலை பின்பற்றிய நடிகர் விஜய், இப்போது தனது 69வது படத்தில், மாதத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பு, 10 நாட்கள் கட்சிப்பணி என்று மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு பிறகு விஜய், முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். சினிமாவில் இனி நடிக்கப் போவது இல்லை என்றும் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில், பையனூரில் நடந்து வரும் பாடல் காட்சி குறித்த சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. பையனூரில் பெப்ஸி கட்டுப்பாட்டில் உள்ள பிலிம் சென்டரில், பிரமாண்டமான ஷெட் அமைக்கப்பட்டு அங்கு பாடல் காட்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது. எச் வினோத் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த பாடல் காட்சியில் 1000க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடன கலைஞர்கள் யூனிட் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த பாடல் காட்சியில் பங்கேற்று ஆடி வருவதாக கூறப்படுகிறது. இது வழக்கமான விஜய் படத்து குத்துப்பாட்டாகவும், விஜய்க்கு மாஸ் காட்டும் ஒரு ஒன் லாஸ்ட் சாங்காகவும் உருவாகி வருகிறது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





