இயக்குனர் இமயம் என்று புகழ்பெற்ற பாரதிராஜா, தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர். ராதா, ரேவதி, ராதிகா, கார்த்திக், பாண்டியன், பாக்யராஜ் என பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளின் பட்டியல் பெரிது.
அந்த வகையில் “காதல் ஓவியம்” என்ற திரைப்படத்தில் கண்ணன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் கண்ணன் நடித்திருந்தார். இளையராஜா இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இவர் அதனை தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களிலேயே நடித்தார். அதன் பின் சினிமாவில் இருந்தே விலகிவிட்டார்.
இந்த நிலையில் நடிகர் கண்ணன், பல வருடங்கள் கழித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பாரதிராஜாவின் “காதல் ஓவியம்” திரைப்படத்தில் ஒப்பந்தமானது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கண்ணனின் உண்மையான பெயர் சுனில் கிரிப்லானி. இவர் இளம் வயதில் இருந்தபோது ஒரு பெங்காலி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த படத்திற்கான ஆடிஷனுக்காக சென்னை வாஹினி ஸ்டூடியோவுக்கு வந்திருக்கிறார்.
மிகவும் சீக்கிரமாகவே வந்துவிட்டதால் அங்கே ஒரு அறையில் சிறிது நேரம் காத்திருந்தாராம். அப்போது அந்த ஸ்டூடியோவில் இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து ஒரு பாடலை ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தார்களாம். அந்த பாடல் மிகவும் அருமையாக இருந்ததாம்.
அப்போது கண்ணனை ஆடிஷனுக்கு வரச்சொல்லி இருந்தவர் அழைத்துக்கொண்டு போய்விட்டாராம். அந்த பெங்காலி படத்தில் கண்ணனுக்கு ஒரு வயதான கதாபாத்திரமாம். ஆதலால் அவருக்கு வயதான கெட்டப் போட்டு ஃபோட்டோஷூட் எடுத்திருக்கிறார்கள். அதன் பின் ஒரு மாதம் கழித்து அதற்கான பதில் வந்ததாம். அதாவது வயதான கெட்டப் போட்டும் வயதானவர் போல் தெரியவில்லை என்று கூறி அந்த பெங்காலி படத்தில் இருந்து அவரை ரிஜெக்ட் செய்தனராம்.
அந்த விஷயத்தை கேட்டுவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கீழே இருந்த ஒருவர், அவரிடம் வந்து “நீ பாரதிராஜா படத்திற்கு ஆடிஷன் வருகிறாயா?” என கேட்டிருக்கிறார். பாரதிராஜாவா என்று அசந்துப்போய் அவரும் சரி என்று ஒப்புக்கொண்டாராம்.
அதன் பிறகு அவர் பாரதிராஜாவை சந்திக்க, அவரும் கண்ணன் என்று பெயர் மாற்றி இவரை “காதல் ஓவியம்” திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினாராம். ஆனால் “காதல் ஓவியம்” திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படமாக அமைந்துவிட்டதுதான் இதில் சோகம்.





