நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகையன்று வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படம் வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதையாக இருந்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அஜீத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவனை வேண்டாம் என நிராகரித்துவிட்டு, இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாய்ப்பளித்தார். ஆனால் அப்போது அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் மறைவு காரணமாக, பல மாதங்கள் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் மணல் புயல், கடும் குளிர், கனமழை, பனிமழை காரணமாக அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டது.
ஒரு கட்டத்தில், விடாமுயற்சி படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் இந்தியன் 2, இந்தியன் 3, வேட்டையன், விடாமுயற்சி என 4 பெரிய படங்களை தயாரித்ததால், நிதி நெருக்கடி ஏற்பட்டு விடாமுயற்சி படப்பிடிப்பை பிரேக்கப் செய்துவிட்டது. 5 மாதங்களுக்கு படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அஜீத்குமார் உள்ளிட்ட படக்குழுவும் சென்னைக்கு திரும்பி விட்டது.
அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி நடத்தப்பட்டு, அங்கு எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்போது ஐதராபாத்தில், கிளைமாக்ஸ் சண்டை காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 13ம் தேதியுடன் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
இதற்கிடையே ஸ்பெயினில் திரிஷா, அஜீத்குமார் நடிக்கும் பாடல்காட்சி ஒன்று மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அதனால் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. விடாமுயற்சி படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யாவிட்டால், படத்தை வாங்க மாட்டோம் என நெருக்கடி தந்துள்ளதால், லைகா நிறுவனம் விரைவில் படத்தை முடிப்பதில், தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.





