தமிழ் சினிமாவில் இந்த முறை அதிகமாக பேசப்பட்ட டாபிக்குகளில் விடாமுயற்சியும் ஒன்று. துணிவு திரைப்படத்தின் சூட்டிங் நடக்கும்போதே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன்.
இதன்பிறகு ப்ராஜெக்ட்டுக்குள் வந்தார் மகிழ்திருமேனி. ஏற்கனவே தடையற தாக்க, தடம், மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜானர் படங்களுக்கு பெயர் போன மகிழ்திருமேனி, அஜித்தை வைத்து இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்தது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியானது. ஆனால் அதன் பிறகு படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களை கடந்துவிட்ட போதிலும் விடாமுயற்சியிலிருந்து தகவல் ஏதும் வெளியாகாததால் விரக்தி அடைந்தனர் அஜித் ரசிகர்கள்.
இதற்கு காரணம் அஜித் தான் என்றும், அவர் பைக் டூர் சென்றிருப்பதாலே என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு திணறி வருவதாகவும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் விடாமுயற்சி ட்ராப் ஆவதாக தகவல் வெளியான நிலையில் அதனை தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டமாக மறுத்தது. இப்படியான சூழலில், அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி சூட்டிங் தொடங்கியது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், சமீபத்தில் சென்னைக்கு திரும்பினார் அஜித்குமார். இதன் பிறகு படம் இதுதான் எடுக்கப்படுவதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விடாமுயற்சியிலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படக்குழு மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்கிறதாம். ஏழாம் தேதி ஆரம்பித்து 70 நாட்கள் வரை தொடர்ந்து அங்கு சூட்டிங் நடைபெற உள்ளதாம். ரூட் ஆக்சன் திரில்லராக இந்த படத்தை எடுத்து வருகிறாராம் மகிழ் திருமேனி. அது மட்டுமல்ல அடுத்த ஆண்டு மே மாதம் இந்த திரைப்படத்தை வெளியிட அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.





