நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதற்கு தமிழ்நாடு வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டது. அத்துடன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் விஜய். அதில் அரசியல் குறித்த தனது பார்வைகளை அவர் விவரித்து இருந்தார்.
முக்கியமாக அரசியல் என்பது தனக்கு பொழுதுபோக்கு இல்லை என்றும், அது ஒரு புனிதம் எனவும் குறிப்பிட்டு இருந்தார் விஜய். அது மட்டுமல்லாமல் மத அரசியல் இருப்பதாகவும் கூறியிருந்த அவர், அரசியலில் ஆழம் மட்டுமல்ல நீள அகலத்தையும் தனது முன்னோர் வழி நின்று பார்த்திருப்பதாக கூறினார்.
தான் தற்போது ஒப்புக் கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்படியான சூழலில், அந்த அறிக்கையிலேயே பல இடங்களில் பிழை இருப்பதாகவும், தமிழக வெற்றி கழகம் என பெயர் வைப்பதற்கு பதில், தமிழ்நாடு என்று ஏன் வைக்கவில்லை எனவும் பலர் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து தனது கட்சி பெயரில் க் எழுத்தை சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என மாற்றினார் தளபதி விஜய்.
இந்நிலையில் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து முதல்முறையாக உறுப்பினர் சேர்க்கை அணியை விஜய் அறிவித்தார். இதில் முழுக்க முழுக்க பெண்கள் தலைமையிலேயே அணி அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அது மட்டுமல்லாமல் விஜயின் நகர்வை பலரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து தனது கட்சியில் சேர்வதற்கான செயலியையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.
அதுமட்டுமல்லாமல் சில கொள்கைகளையும் வெளியிட்டு அவர் இதை பிடித்திருந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறி இருந்தார். கடந்த எட்டாம் தேதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை 50 லட்சம் பேர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் அரை லட்சம் தொண்டர்களை விஜய் சம்பாதித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.





