எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன் நிறுவனமே தயாரித்தது. வணங்கான் எனப் படத்திற்கு பெயரிடப்பட, அதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் சூர்யா காது கேளாதவராக வாய் பேச முடியாதவராக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் முதல் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திடீரென வணங்கான் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
படப்பிடிப்பின் போது சூர்யா பாலா இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்த பாலா, பிதாமகன், நந்தாவைப் போல இன்னொரு திரைப்படத்தில் நாம் இணைவோம் என்று கூறியிருந்தார். அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலாவிடம் இது குறித்து கேள்வி கேட்டபோது, என் தம்பியுடன் இணைவதில் என்ன இருக்கிறது என்று கூறிவிட்டு சென்றார்.
இதனிடையே வணங்கான் திரைப்படம் அருண் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்தார். கங்குவா என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதில் யோகி பாபு, திஷா பதானி, கோவை சரளா, ஜெகபதிபாபு, நட்டி உள்ளிட்ட ஏராளமான நடித்து வருகின்றனர். மறுபிறவி குறித்த கான்செப்ட்தான் இந்த திரைப்படத்தின் ஒற்றை வரியாம்.
இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வசனங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மதன் கார்க்கி. இதன் சூட்டிங் தாய்லாந்து கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் சூட்டிங்கின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில், சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கான போஷன்கள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள வேலைகளில் சிறுத்தை சிவா ஈடுபட்டு வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென அவர் சுதா கொங்கரா உடன் இணைந்தார். சூர்யாவின் 43 வது திரைப்படம் ஆக இது உருவாகிறது. இதில், துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கு புறநானூறு என பெயரிடப்பட்டுள்ளது.
பீரியட் திரைப்படமாக இதனை உருவாக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளாராம். மொழிப்போரை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். இதற்காக லொகேஷன் பார்க்கும் பணியில் சுதா கொங்கரா ஈடுபட்டு வருகிறார். இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது. மதுரையில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த இயக்குனர் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியிலேயே இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





