நடிகர் கருணாஸ், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். நந்தா படத்தில், லொடுக்கு பாண்டி கேரக்டரில் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுவராக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில், தனக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி வீட்டிலேயே புகுந்து திருடுவார். அந்த காட்சியில் நடித்து பிரபலமான கருணாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
பாபா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களில் காமெடி செய்த கருணாஸ், ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்களும் அதிக நாட்கள் ஓடியது. தொடர்ந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டிய கருணாஸ், 2015ல் அதிமுக எம்எல்ஏவாகவும் இருந்தார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017ம் ஆண்டில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அணிமாறாமல் இருப்பதற்காக மாமல்லபரம் பகுதியில் உள்ள கூவத்தூரில், நட்சத்திர சொகுசு ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். அந்த ஏற்பாடுகளை எல்லாம் கருணாஸ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பேசிய அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏவி ராஜூ என்பவர், அங்கு தங்கியிருந்த ஒரு எம்எல்ஏ ஒருவர், நடிகை திரிஷா தனக்கு வேண்டும் என்று கேட்டதாகவும், ரூ. 25 லட்சம் கொடுத்து அதற்கான ஏற்பாட்டை நடிகர் கருணாஸ் செய்தததாகவும் அவதூறாக பேசியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை உண்டாக்கியது.
இதையடுத்து இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகர் கருணாஸ், இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அதில், என் மீது வன்மம் கொண்டு அவதூறான, உண்மைக்கு மாறான, அருவறுப்பான செய்தியை ஏவி ராஜூ பரப்பி உள்ளார். நடிகை திரிஷா குறித்தும், என்னையும் தொடர்புபடுத்தி பேட்டி கொடுத்துள்ளார்.
இது யூடியூப் மற்றும் சேனல்களில் வெளியாகி, பலரும் அவதூறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே ராஜூ மற்றும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அந்த வீடியோவையும் நீக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.





