நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பெரிய ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்தவர். இப்போது சிவாஜி கணேசனை போல, தமிழ் சினிமாவில் மூத்த குடும்பமாக பார்க்கப்படுகிறவர். அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா என அனைவருமே தமிழ் சினிமா வாரிசுகளாக, அசத்திக்கொண்டு இருக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய சொற்பொழிவு, நூல் வௌியீடு, வாழ்க வளமுடன் வேதாத்திரி மன்ற நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகள், சினிமா விழாக்களில் கலந்துக்கொள்ளும் சிவக்குமார், தன் இளமை கால அனுபவங்கள், சினிமா அனுபவங்கள், வாழ்க்கை தத்துவங்கள் என மிகவும் அழுத்தமாக, ஆழமான விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் சிவக்குமார்.
தமிழ் சினிமாவுலகில் சிவக்குமாருக்கு திரையுலக மார்க்கண்டேயன் என்ற பெயர் உண்டு. அதற்கு காரணம் அவர் ஒழுக்க சீலராக இருந்தவர். மது, சிகரட், பெண்கள் சகவாசம் என எந்த தீய பழக்கமும் இல்லாதவர். தியானம், யோகா, ஆசனங்கள், உணவுக்கட்டுப்பாடு என பல விஷயங்களில் மிக கவனமாக இருப்பவர். பல ஆண்டுகளாக டீ காபி கூட சாப்பிட மாட்டார் என்று அவரே கூறியும் இருக்கிறார்.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன், காரைக்குடியில் நடந்த பழ கருப்பையாவின் இப்படித்தான் உருவானேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துக்கொண்டார். அப்போது சிவக்குமாருக்கு அணிவிப்பதற்காக வயதான முதியவர் ஒருவர், சால்வையுடன் நின்றிருந்தார். அப்போது சிவக்குமார் அந்த சால்வையை பிடுங்கி தூரமாக வீசி எறிந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
பொது இடங்களில் தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களின் ஏற்கனவே செல்போன்களை தட்டி விட்டு, சர்ச்சயைில் சிக்கியவர் நடிகர் சிவக்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சால்வையை பிடுங்கி எறிந்த சம்பவமும் பெரிய சரச்சையாகி மாறி, சிவக்குமாரை பலரும் விமர்சித்தனர். 82 வயதில் இப்படி நடந்துக்கறாரே, என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஒரு வீடியோ பதிவை சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதில் சிவக்குமாருடன். சால்வை பறித்தபோது இருந்த நபரும் அருகில் அமர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய சிவக்குமார், இவர் வேறு யாருமல்ல, எனது 50 ஆண்டு கால நண்பர் கரீம். அன்று நடந்த விழா முடிய 10 மணிக்கு மேலாகி விட்டது. மிகவும் சோர்வடைந்து விட்டேன். சால்வை அணிவதும் எனக்கு பிடிக்காது. அதனால் கோபத்தில் சால்வையை பிடுங்கி எறிந்து விட்டேன். பொது இடத்தில் அப்படி நடந்துக்கொண்டது தவறுதான். இதற்காக நான் ரொம்பவும் வருத்தப்படுகிறேன், என்று கூறியிருக்கிறார் சிவக்குமார்.





