எந்த ஒரு படமும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அந்த படம் இமாலய வெற்றி பெறும். யாருமே அந்த படத்துக்கு பிரமோ செய்ய வேண்டியது இல்லை. பர்ஸ்ட் லுக், பர்ஸ்ட் சிங்கிள், டைட்டில் பிரமோ, கேமியோ ரோல் இப்படி எதுவுமே அவசியமில்லை. படம் நன்றாக இருந்தால் ரசிகர்களே அந்த படத்தை பிரமோ செய்து விடுவார்கள் என்பதற்கு உதாரணம் மஞ்சும்மெல் பாய்ஸ்.
ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பிப்ரவரி 22ம் தேதி வெளியானது. இதுவரை 20 தினங்களில் ரூ. 150 கோடியை வசூலில் தொட்டுள்ளது என்றால், இது படத்தை இயக்கிய இயக்குநர், படத்தில் நடித்தவர்கள், படத்தின் தயாரிப்பாளர் என அனைவருக்குமே மிகப்பெரிய ஆச்சரியமாக தான் இருக்கும். ஏதோ சில கோடிகள் லாபத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் லாபம் கொட்டியிருக்கிறது.
சில படங்கள்தான் இப்படி யாருமே எதிர்பார்க்காத அமோக வரவேற்பை பெறும். அது ரசிகர்களின் மனநிலையை பொருத்தது மட்டுமின்றி, ஏதேனும் ஒரு விதத்தில் அந்த படம், ரசிகர்களின் மனதை ஆழமாக போய் தொட வேண்டும். எப்போதுமே மலையாள படங்கள், கதையை மையப்படுத்தியே இருக்கின்றன. தமிழ் சினிமா போல, கதாநாயகனை நம்பி இருப்பதில்லை. கதாநாயகனுக்காக கதை எழுத மலையாளத்தில் யாரும் விரும்புவதில்லை.
அதே போல் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜெயராம் என யாராக இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் அதில் நடிப்பதற்கான ஸ்கோப் இருந்தால், தனது திறமை அங்கு வெளிப்படும் என்றால் அந்த படங்களில் நடிக்க உடனே சம்மதிப்பார்கள். ரஜினி, விஜய், அஜீத் போல இயக்குநர் யார், தயாரிப்பாளர் யார், கமர்ஷியல் ஹிட் படமா, வசூல் அள்ளுமா என்றெல்லாம் மலையாள நடிகர்கள் கணக்கு போடுவது இல்லை.
அந்த ஒரு வெளிப்பாடுதால், மலையாள சினிமா தொடர்ந்து ஜெயிக்கிறது. பெயர் வாங்குகிறது. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மெல். அந்த பட இயக்குநர் சிதம்பரத்தை அழைத்த நடிகர் தனுஷ், யாரடி நீ மோகினி போல ஒரு காதல் கதை பண்ணுங்கள் என்று சொல்ல, அந்த காதல் கலாசாரம் பற்றி எனக்கு தெரியாது. தெரிந்துவிட்டு வருகிறேன், என்று நோஸ்கட் கொடுத்து சென்றதாக தகவல் பரவி வருகின்றன.
இந்நிலையில், இதுவரை ரூ. 150 கோடியை வசூலை கடந்த மிகப்பெரிய வெற்றிப் படமான மஞ்சும்மெல் பாய்ஸ் படம் ஓடிடி தளத்தில் விற்பனை ஆகவில்லை. இப்படி ஒரு வெற்றிப் படத்தின் ஓடிடி உரிமம் வாங்க ஓடிடி தளங்கள் போட்டி போட்டு வாங்க முன்வராத காரணம், ரூ. 20 கோடி என்ற அதிக விலைதான். படத்தயாரிப்பு நிறுவனம் அதிக பேராசைப்படுகிறது என்ற விமர்சனம் இதனால் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியிருக்கிறது. எனினும் சில தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.





