காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் எடுக்கப் போவதாக இருந்தது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான புதிதில், விக்னேஷ் சிவன் அஜித் கூட்டணி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர்.
படத்திற்கான பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகளிலும் விக்னேஷ் சிவன் இறங்கினார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அஜித் உடனான படம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு கிடைத்தது. அவருக்கு விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார். இப்படியான சூழலில் விக்னேஷ் சிவன் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக எல் ஐ சி எனப்படும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் கசிந்தது. சிவகார்த்திகேயனுக்காக அவர் எழுதிய இந்த திரைக்கதையில், இறுதியாக லவ் டுடே திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அந்த திரைப்படம் கை மாறியது. லியோ திரைப்படத்தை தயாரித்த லலித்குமாரே, எல் ஐ சி படத்தை எடுப்பதற்கு முன் வந்தார். ஆனால் படத்தின் டைட்டில் பலருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இது தன்னுடைய டைட்டில் என தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளிக்க, சம்பந்தப்பட்ட எல்ஐசி நிறுவனமும் இதற்கு எதிராக போர் கொடி தூக்கியது. ஆனால் இதையெல்லாம் விக்னேஷ் சிவன் கண்டு கொண்டது போலையே தெரியவில்லை. கோவை சுற்றுவட்டார பகுதியில் தனது சூட்டிங் முடித்த அவர், இப்போது படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அங்கு பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி செட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் எஸ் ஜே சூர்யா இணைய இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





