நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று புகழுக்கு சொந்தக்காரர். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், அப்போதே சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். அவர்களது மடியில், தோள்களில் தவழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர்.
தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் கலைஞர்கள், பிற படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞர்களை விரைவில் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை திறமை வெளிப்பட தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பளிப்பவர்தான் கமல்ஹாசன். அதே போல்தான் கேப்டன் விஜயகாந்தும். திறமைசாலி கலைஞர்களை இருவருமே கைதூக்கி விடுவதில் ஆர்வம் கொண்டவர்கள்.
சினிமாவில் வில்லன் நடிப்பில் பெயர் பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். துவக்கத்தில் அடியாளாக பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்த அவரை, வில்லன் நடிகராக்கிய பெருமை கேப்டன் விஜயகாந்துக்கு உண்டு. நடிகர்கள் சரத்குமார், மன்சூர் அலிகான் போன்றவர்களையும் வில்லனாக நடிக்க வைத்தவரும் விஜயகாந்த் தான்.
வில்லனாக பொன்னம்பலம் நடிக்க துவங்கிய பிறகு செந்தூரப்பாண்டி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்துக்கு தான் வில்லனாக நடித்திருப்பார். அதே போல் சில படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் சில காட்சிகளில் காமெடி நடிப்பிலும் பொன்னம்பலம் அசத்தியிருப்பார். அதற்கு காரணம் நடிகர் கமல்ஹாசன்.
மைக்கேல் மதன காமராஜன் படம் ஷூட்டிங் எடுத்த போது, அடியாள் நடிகராக இருந்த பொன்னம்பலத்தை இந்த படத்தில் சில காமெடி காட்சிகளில் நடிக்கவும் வைத்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சண்டைக்காட்சி நடிகராக இருக்கும்போது ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல், 1000 ரூபாய் வரை கொடுப்பார்கள்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்த போது, இந்த படத்தில் சில காட்சிகளில் நீ நடி என்று கமல் சார் சொன்னார். காசு கொடுத்தா நடிக்கிறேன். ஒரு நாளைக்கு எனக்கு 2 ஆயிரம் ரூபா சம்பளம் கொடுங்க என்றேன். அதை நீ தயாரிப்பாளரிடம் பேசிக்கொள் என்று கமல் கூறிவிட்டார். படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை அவரது வீட்டில் போய் சந்தித்து, ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நடிக்கிறேன், என்றேன். அட, நீ 5 ஆயிரம் ரூபாய் கேட்பேன்னு நெனைச்சேன், சரி நீ கேட்ட 2 ஆயிரமே தருகிறேன். சந்தோஷமாக நடி என்று சொல்லிவிட்டார். அய்யோ, 3 ஆயிரம் போச்சே, 10 நாள் நடிச்ச்சா, 30 ஆயிரம் போச்சே, கமல் சார் சொல்லியும் கம்மியா கேட்டுட்டேன். வடை போச்சே, என்று புலம்பி இருக்கிறார் பொன்னம்பலம்.





