தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, நடிகையாக இருப்பவர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் இமேஜ் குறையும் போது படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட் சரிவடையும் போது அவர்கள் அரசியல் பக்கம் தங்களது கவனத்தை திருப்புகின்றனர்.
அரசியலில் ஆர்வமாக களம் இறங்கும் அவர்கள், சினிமா பிரபலம் தந்த அந்த பப்ளிசிடி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்று அரசியலில் முக்கிய இடத்துக்கு விரைவில் வந்துவிடுகின்றனர். குறிப்பாக நடிகைகள் குஷ்பூ, விஜயசாந்தி, ராதிகா, நக்மா, விந்தியா, நமீதா என பல நடிகைகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான்.
ஆந்திரா அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக முக்கிய இடத்தில் இருந்தவர் நடிகை ரோஜா. கடந்த ஆட்சியில் ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் விளையாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் நடிகை ரோஜா. ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் இவர் முக்கிய அமைச்சராக வலம் வந்தார்.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அரசியல் ஆட்டத்தில் ஆட்டம் இழந்தார் நடிகை ரோஜா. இவர் தமிழ் சினிமாவில் 1990களில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானார். இவரை இயக்குனர் ஆர்கே செல்வமணி அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்திலேயே பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க, ரோஜா கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து நடிகர் ரஜினியுடன் வீரா, உழைப்பாளி போன்ற படங்களில் நடித்தார். விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், பிரபுதேவா, கார்த்திக், முரளி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ரோஜா ஒரு கட்டத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்தார்.
தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை இழந்த நிலையில், அவரது சொந்த மாநிலம் ஆந்திரா பக்கம் சென்று அரசியலில் ஆர்வம் காட்டினார். முதலில் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்ந்த அவர், பிறகு ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு மாறினார். ஆனால் கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சந்தித்த படுதோல்வியால் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ரோஜா. தமிழ் சினிமாவில் இப்போது அம்மா நடிகைகளுக்கு பலத்த பஞ்சம் நிலவுகிறது. எனவே நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தால் அம்மா நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.





