இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆர். பார்த்திபன். இவர் தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜி கணேசனுடன் போஸ்ட்மேன் கேரக்டரில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பார்த்திபன் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். புதிய பாதை என்ற படம் மூலம் நடிகர் பார்த்திபன், இயக்குனர் பார்த்திபனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்த போது நடிகர் பார்த்திபனுக்கும், சீதாவுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை நடிகர் பார்த்திபன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை சீதா நடிக்க பார்த்திபன் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து நடிகராக வெற்றி பெற்ற நடிகர் பார்த்திபன், பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக பார்த்திபன் நடித்த அழகி, சபாஷ், வெற்றிக்கொடி கட்டு, உள்ளே வெளியே, சுகமான சுமைகள், பொண்டாட்டி தேவை, அபிமன்யு, தாலாட்டு பாடவா, என்னருகே நீ இருந்தால் போன்ற பல படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக அமைந்தன.
பார்த்திபன் படத்தில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கவும் செய்தார். அதேபோல் சில படங்களை அவரே தயாரித்தார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்கள் தேசிய விருதுகளை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை தருபவர் பார்த்திபன்.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு வந்த பலர், அது நிறைவேறாத நிலையில் கேமராக்களை வைத்துக்கொண்டு விமர்சிக்க தொடங்கி விட்டனர். தற்போது ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாகவே அந்த படம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களின் தாக்கத்தால் படம் பார்ப்பதற்கு முன்பே அந்த படம் குறித்த ஒரு பிம்பத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி கொண்டு படம் பார்த்து செல்கின்றனர். அந்த படம் நல்ல படமா இல்லையா என்பதை முன்னதாக கணித்து விடுகின்றனர்.
இதனால் வெகுவாக திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது. விஜய் அஜித் ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படங்கள் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்களால் எப்படியாவது திரையரங்கில் ஓடி விடுகின்றன. ஆனால் சிறிய பட்ஜெட்டில் புது நடிகர்களை கொண்டு எடுக்கப்படும் படங்கள், இந்த விமர்சனங்களால் பலத்த அடி வாங்குகின்றன என்று பார்த்திபன் பேசியிருக்கிறார். இதில் ரசிகர் கூட்டத்தை வைத்து ரஜினி விஜய் படங்கள் எப்படியாவது ஓடி விடுகிறது என்று பார்த்திபன் கலாய்த்து இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.





