தமிழ் சினிமாவில் பாடகி சித்ரா மிக பிரபலமானவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். குறிப்பாக எஸ்பி பாலசுப்ரமணியம், கேஜே ஜேசுதாஸ், மனோ, மலேசியா வாசுதேவன், ஹரிஹரன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் சித்ரா பாடிய பாடல்கள், பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நிறைய மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. பிரபலங்கள் பெயர்களில் புதிய கணக்கு துவங்கி, பணம் கடன் கேட்பது, போலியான நிறுவனங்கள் பெயரில் விளம்பரங்கள் செய்வது, அவர்களது புகைப்படங்களுடன் அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது போன்ற மோசடிகள் அடிக்கடி நடக்கின்றன.
சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ், எஸ்கே புரடக்சன்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெயரில் புதிய படங்களுக்கான ஆடிஷன் நடப்பதாகவும், இதில் புதுமுக நடிகர், நடிகைகள் தேர்வு செய்வதாகவும் காஸ்டிங் ஏஜண்டுகள் போல போலியான விளம்பரங்களை செய்து மோசடியில் ஈடுபட்டது. இதுகுறித்து அந்த தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் எச்சரித்தும், சட்டப்படி மோசடி நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.
பிரபல பின்னணி பாடகி சித்ராவும் தற்போது இப்படி ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளார். மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ள பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளம் ஒன்றில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவு குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் தூதராக இருக்கிறேன் என்று அதில் பொய்யான தகவலை கூறியுள்ளனர்.
இதில் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளை பெற்றால், அதன் மதிப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்றும், அந்த விளம்பரத்தில் பொய்யாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அதில் டெபாசிட் செய்யும் ரசிகர்களுக்கு ஐபோன் பரிசாக தருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் எதுவுமே உண்மை இல்லை என்று சித்ரா கூறியிருக்கிறார்.
இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட பாடகி சித்ரா, உடனடியாக இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி, இதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம். இது ஒரு போலியான விளம்பரம் என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார். இந்த போலியான விளம்பரத்தை நம்பி ரசிகர்களும், பொதுமக்களும் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து தனது பதிவில் மூலம் பாடகி சித்ரா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





