சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. பிரம்மாண்டத்தில் கவனம் செலுத்திய சிறுத்தை சிவா, திரைக்கதையில் கோட்டை விட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை வெறும் 70 கோடி ரூபாய் மட்டுமே இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விமர்சனம் மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் சர்ச்சைக்குள்ளும் சிக்கி இருந்தது. படத்தை பார்த்த பலரும் அதனை கடுமையாக விமர்சித்து இருந்தனர். இணையத்தில் கேலி கிண்டலுக்கு கங்குவா திரைப்படம் ஆளாக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்புகளை ஜோதிகா தெரிவித்திருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் பேசுபொருளாகி இருந்த சூழலில், கலெக்ஷனை கவர தவறிவிட்டது என்பதே நிதர்சனம். இதனிடையே சூர்யா தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார். தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
சூர்யாவின் 44வது திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இதனை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தமான் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் சுப்புராஜ் இதனை படமாக்கியுள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் அவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
இதில் சூர்யா இரண்டு கெட்டப்களில் வருகிறார். பூஜா ஹெக்டே, கருணாகரன் ஜெயராம் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அனேகமாக, அடுத்த ஆண்டு மே மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்.ஜே பாலாஜியுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.
ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இது உருவாகிறது. படத்தில் கதாநாயகியாக திரிஷா வருகிறார். அவருக்காக ஆர்ஜே பாலாஜி எழுதியிருந்த மாசாணி அம்மன் திரைப்படத்தின் கதையை தான் சற்று மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன் கோயில் செட் போட்டு இந்த திரைப்படத்தை 45 நாட்கள் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.





