தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். விக்ரம் நடித்த சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் கடந்த 1999ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10ம் தேதி வெளியானது. தற்போது தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை இயக்குனர் பாலா நிறைவு செய்கிறார்.
சேது படத்தை தொடர்ந்து சூர்யா நடித்த நந்தா, விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன், ஆர்யா நடித்த நான் கடவுள், அதர்வா நடித்த பரதேசி, விஷால் ஆர்யா நடித்த அவன் இவன், சசிக்குமார் நடித்த தாரை தப்பட்டை, ஜோதிகா நடித்த நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அடுத்து பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்த வணங்கான் படம் வெளியாக உள்ளது.
இயக்குனர் பாலாவின் திரை பயணத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், விக்ரம் நடித்த சேது, பிதாமகன் போன்ற படங்கள் மிக முக்கியமான படங்களாக இருந்தன. அந்த படங்கள் இயக்குனராக பாலாவுக்கு மட்டும் பெரிய வெற்றியை தந்தது மட்டுமின்றி ஹீரோக்களாக நடித்த விக்ரம் மற்றும் சூர்யாவுக்கும் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
ஆனால் சூர்யா, விக்ரம் ஆகியோருடன் இயக்குனர் பாலாவுக்கு பல ஆண்டுகளாக கருத்துவேறுபாடு, மனக்கசப்பு காரணமாக சந்திப்பதும் இல்லை. பேசிக்கொள்வதும் இல்லை. விக்ரம் குறித்து பாலா, சூர்யா குறித்து பாலா பேசுவதும் இல்லை. அதே போல் சூர்யாவும், விக்ரமும் பாலா குறித்து எந்த இடத்திலும் பேசுவதில்லை.
இந்நிலையில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் பலத்த மனக்கசப்பு நீடித்து வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு வணங்கான் பாலா 25 என்ற பெயரில் பாராட்டு விழா நடத்த வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த விழா வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க உள்ளது. இந்த விழாவில் குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக இயக்குனர் பாலா படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் முக்கியமாக பங்கேற்று குருவுக்கு மரியாதை செய்ய வேண்டிய ஹீரோக்கள் சியான் விக்ரமும், சூர்யாவும்தான். அவர்கள் வருவார்களா என்பதுதான் பலரது கேள்வியாக எழுந்துள்ளது.





