இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை 2 படம் வருகிற 20ம் தேதி வெளியாக உள்ளது. கடந்தாண்டில் வெளியான விடுதலை படத்தை தொடர்ந்து கடந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் ஏறக்குறைய 20 மாதங்கள் தாமதமாக வருகிற 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விடுதலை படத்தின் முதல் பாகத்தை பொருத்தவரை சூரி தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வந்தார். விஜய் சேதுபதி அதிகபட்சம் 5 காட்சிகளில் மட்டுமே வந்தார். எனினும் சூரியை விட, ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றவர் வாத்தியார் பெருமாள் ஆக நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான்.
இந்நிலையில் விடுதலை 2ம் பாகத்தில் சூரியை காட்டிலும் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது, வெளியான விடுதலை 2 டிரெய்லரிலேயே தெளிவாகி விட்டது. அதனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் விடுதலை 3 படத்துக்கான லீடும், இந்த படத்தின் கிளைமாக்ஸில் வருகிறது.
விடுதலை 2 படத்துக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப் போவது வாடிவாசல் படம்தான். கடந்த 3 ஆண்டுகளாக அந்த படம் குறித்து அறிவிக்கப்பட்டு, இன்னும் ஷூட்டிங் துவங்கப்படாமல் இருக்கிறது. விடுதலை 2 படப்பிடிப்பு காரணமாக, வாடிவாசல் படத்தை பெண்டிங்கில் வெற்றிமாறன் வைத்து விட்டார்.
தற்போது விடுதலை 2 படம் வெளியான பிறகு முழு மூச்சாக, வாடிவாசல் படப்பிடிப்பில்தான் வெற்றிமாறன் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார், ஸ்கிரிப்ட் பணிகளை செய்து முடிப்பதுடன் படப்பிடிப்பு தொடர்பான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளையும் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்துவரும் சூர்யா, இந்த படத்தை முடித்த பிறகு, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் நேரடியாக பங்கேற்கிறார். இந்த படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாடிவாசல் படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





