மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான புஷ்பா 2 படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 275 கோடி வரை வசூலில் சாதனை படைத்துளளது. இதுவரை எந்த இந்திய படமும் முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூலை எட்டியதில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் 4ம் தேதி இரவு, ஐதராபாத்தில் ஒரு தியேட்டரில் புஷ்பா 2 பிரிமியர் ஷோ நடந்தது. இதில் நடிகர் அல்லு அர்ஜூனும் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது குழந்தையும் படுகாயமடைந்தது. இந்த சம்பவம் ஐதராபாத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தியேட்டர் நிர்வாகம் மீதும், நடிகர் அல்லு அர்ஜூன் மீதும் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த அந்த குழந்தை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து தெலங்கானா அரசு, இனி யார் நடித்த படமாக இருந்தாலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புஷ்பா 2 படம் குறித்து பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தாலும் ஒரு தரப்பினர் மட்டும் புஷ்பா முதல் பாகம் அளவுக்கு 2ம் பாகத்தில் அவ்வளவு சுவாரசியமான காட்சிகளோ திரைக்கதையோ வலுவாக இல்லை என்று கூறி வருகின்றனர். பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறனும் புஷ்பா 2 குறித்து எதிர்மறையான விமர்சனத்தையே தந்துள்ளார்.
புஷ்பா 2 படம் குறித்து ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, புஷ்பா படத்தின் முதல் பாகம் ஏன் ஓடியது என்பதே தெரியாத விஷயம். இதில் 2ம் பாகத்தை வேறு எடுத்துள்ளனர். படத்தின் முதல் பாதி என்னவோ ஓரளவுக்கு நன்றாக இருந்தது. 2ம் பாதியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தின் முதல் சீனிலேயே ஜப்பான்காரன் தமிழில் பேசுகிறான். இங்கிருந்து அங்கு சென்றவன் ஜப்பானிய மொழியில் பேசுகிறான். இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முதல் பாதியில் சில சீன்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால் 2ம் பாதியில் ஒவ்வொரு சீனையும் ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். அதே சமயம் டெக்னிக்கலாக படம் சூப்பராக இருக்கிறது. எல்லோரும் சொல்வார்கள், இந்த படத்தை ஹீரோ தனது தோளில் சுமந்து இருக்கிறார் என்று. அப்படி சுமந்துதான் அல்லு அர்ஜூனின் தோள்பட்டை ஒரு பக்கம் சைடு வாங்கிடுச்சு போல. முடிவாக இந்த படத்தை பார்க்க ஒரு மனதைரியம் வேண்டும் என்று ப்ளு சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.





