இயக்குனர் நெல்சனின் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம் ஜெயிலர். நெல்சனுக்கு மட்டுமல்ல ரஜினிகாந்துக்கும் இந்தத் திரைப்படம் மிக மிக முக்கியம்தான். ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாக, ரஜினிகாந்துக்கு தர்பார், அண்ணாத்த என வரிசையாக தோல்வி படங்கள் வந்து கொண்டிருந்தன.
இதனால் சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. இளம் இயக்குனருடன் கைகோர்த்த அவருக்கு திருப்திகரமான வெற்றி கிடைக்காத சூழலில் தான், ஜெயிலர் திரைப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பல தரப்பட்ட மக்களையும் கவரவில்லை என்று தான் கூற வேண்டும்.
சொல்லப் போனால் படத்தின் இரண்டாம் பாதி கதைக்கு தொடர்பே இல்லாமல் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும். திரைக்கதையில் அத்தனை தொய்வு இருந்தாலும், சூப்பர் ஸ்டாருக்கான மாஸ் காட்சிகளை பார்த்து பார்த்து செய்திருந்தார் நெல்சன். இது ஒன்று இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு காரணமாகிவிட்டது.
அது மட்டுமல்லாமல் கன்னட நடிகர் சிவக்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரையும் மிகச் சரியான இடத்தில் நெல்சன் பயன்படுத்தி இருப்பார். அதுவும் இந்த திரைப்படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மூன்று பேரும் வருவது திரையரங்குகளை அதிர வைத்தது.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த லால்சலாம் திரைப்படம், படு தோல்வியை சந்திக்க அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் பணிகளும் விரைவில் முடிவடைய இருக்கிறது. இப்படியான நிலையில்தான் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அது வேறு ஒன்றும் இல்லை ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீடு தான். ஏற்கனவே இதற்கான திரைக்கதை அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த நெல்சன், தற்போது படத்தை இயக்க சென்று இருக்கிறார். முதல் பாகத்தை எடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. இதற்கான நான்கு நிமிடங்கள் கொண்ட அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.





